தென் மாவட்டங்களில் நிலவும் அதிருப்தி.. வருத்தம் - கடும் கோபத்தில் சில சமுதாயங்கள்? ஏன்?
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், தென் மாவட்டங்களில் அதிமுக சமூக ரீதியாக பல சவால்களை சந்திக்க நேரிடும் சிக்கல்கள் உள்ளது.
முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி சென்னையை தவிர்த்துவிட்டு, தெற்கே உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெல்வார்கள். அந்தளவுக்கு தென் மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கு பெற்றிருந்தது.
சமூக ரீதியிலான வாக்குகள் தான் இங்கு வைக்கப்படும் குறி. அதிமுக மட்டுமல்ல, திமுகவும் இங்கு சமூகங்கள் சார்ந்த வேட்பாளர்களைத் தான் பெரும்பாலும் நிறுத்த முடியும். இன்று வரை தென் மாவட்டங்களில் நிலவும் சூழலும் இதுதான். ஆனால், இம்முறை அதிமுக எதிர்பாராத பல சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பின்னடைவு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் நாடார் சமூக வாக்குகள் இம்முறை அதிமுகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், வணிகர்கள் ஜெயராஜும் பென்னிக்ஸும் போலீஸ் காவலில் தாக்கப்பட்டு உயிரிழந்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகிறது. நாடார் சமூகத் தலைவர்கள் பலர் பாஜக ஆதரவு நிலையில் இருந்தாலும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் நாடார் சமூக வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், இது அதிமுக அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

மோடியின் குரல்
மேலும், தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகாரம் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் எனும் பட்டியலினத்தின் ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்பதே அந்த சமுதாய மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கை. இதற்காக முதல்வர் பழனிசாமி முன்னெடுத்த முயற்சிகளை மற்ற சமூகத்தினர் மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர். இந்த சூழலில் 'தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்றும் அரசியல் சாசன திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும்' பிரதமர் மோடியே தமிழகம் வந்த போது நேரடியாக அறிவித்தார்.

அதிமுகவுக்கு தலைவலி
இதனால், பாஜக, அதிமுக கூட்டணிக்கு கணிசமான தேவேந்திர குல வேளாளர் சமுதாய வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்றாலும், அதேவேளையில், வேளாளர் என்கிற பட்டத்தைக் கொடுக்கக் கூடாது எனச் சில சமூகங்கள், முதல்வரை இரண்டுமுறை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தியுள்ளன. இவர்களின் வாக்குகள் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக செல்ல வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, தேர்தல் சமயத்தில் அந்தச் சமூகங்களைச் சேர்ந்த சங்கங்கள் இது குறித்த பிரச்சாரங்களை மக்களிடம் முன்னெடுத்தால் அது நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு பெரும் பாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடும் அதிருப்தி
மறுபக்கம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக தலைமை ஒதுக்கியதில், பிறமலைக் கள்ளர் சமூகத்தினரின் மிகுந்த அதிருப்தி மட்டுமல்லாது, கோபத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, வன்னியர்கள் இட ஒதுக்கீடு முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு முன்பு போல் குவியுமா என்பதிலும் கேள்வி எழுவதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். அதுமட்டுமின்றி, சசிகலாவை, பாஜக அரசு மிரட்டி அரசியல் இருந்து ஒதுங்க வைத்ததாக பரவலாக பேசப்படுவதாலும், அதிமுக அரசு மீது கடும் அதிருப்தியில் முக்குலத்தோர் உள்ளதாக கூறுகின்றனர்.

பறிபோன ஆட்சி அதிகாரம்
மறவர் சமூக மக்களும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது வருத்தத்தில் இருக்கிறார்களாம். ஏனெனில், ஜெயலலிதா எனும் ஆளுமை இருந்த போது, அவர் பெயருக்காகவும், அவர் முகத்துக்காகவும் முக்குலத்தோர் மத்தியில் வாக்குகள் விழுந்தன. ஆனால், அவர் இறந்த பிறகு, முதல்வர் வாய்ப்பு கிடைத்தும், அதை ஓ.பி.எஸ் ஒழுங்காக பயன்படுத்தாமல், ஆட்சி குடிகாரத்தை கொங்கு வேளாளர் கைக்கு தாரைவார்த்துவிட்டதாக அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் சவால்
எனவே, இந்த அதிருப்தி வாக்குகளில் சில திமுகவுக்கும், சில தினகரனின் அமமுகவுக்கு விழ வாய்ப்புள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக, தென் மாவட்டங்களில் இம்முறை அதிமுக கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதே கள நிலவரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications