வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி முருகன் பேச அனுமதிக்கலாமே - ஹைகோர்ட் பரிந்துரை
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகன் ஒரே ஒரு நாள் மட்டும் பேச அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை: நளினி முருகனை வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த நாள் எப்போது என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதத்தின் நகலையும் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடிதத்தில் அனுமதிதான் கேட்டுள்ளீர்கள், ஏன் பரிந்துரை செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் நளினி முருகன் ஆகியோருக்கு, வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச ஒரு நாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த நாள் எப்போது என்பது குறித்து வருகிற திங்கட்கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications