ரெயின் கோட்டோடு.. இரவு முழுக்க.. கனமழையில் ரெய்டு விட்ட மேயர் ப்ரியா.. அப்படியே மிரண்டு போன சென்னை
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அமைச்சர்கள் நேரடியாக களமிறங்கி பணிகளை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் நேற்று சென்னையில் இரவு முழுக்க மேயர் ப்ரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மேற்கொண்டார். மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மழை எவ்வளவு?: வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 13.11.2023 வரை 221.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 17 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 13.11.2023 முடிய, 8 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், ஏற்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், இன்று (14.11.2023) காலை 8.30 மணி வரை 35 மாவட்டங்களில் 13.25 மி.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மிக கனமழையும், 30 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி, வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 13.11.2023-ம் நாளிட்ட அறிவிக்கையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை ஏற்பட கூடுமென்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையரின் 13.11.2023 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை தயார் நிலை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அமைச்சர்கள் நேரடியாக களமிறங்கி பணிகளை செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் நேற்று சென்னையில் இரவு முழுக்க மேயர் ப்ரியா ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சென்னையில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.
அதோடு இல்லாமல் நேரடியாக சுரங்க பாதைகளுக்கு சென்று அங்கும் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று பார்வையிட்டார் . மேயர் ப்ரியா இப்படி இரவோடு இரவாக மழையில் ரெயின் கோட்டோடு பார்வையிட்டது அதிகாரிகளை மிரள வைத்தது.
சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இரவு மழை: நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications