சபாஷ்! பெரியாரும் வேண்டும்..பெருமாளும் வேண்டும்: துரை வைகோ ஆலய தரிசனம்- மதிமுக தொண்டர்கள் நெகிழ்வு!
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவின் ஆலய தரிசனங்களை கண்டு நெகிழும் மதிமுக தொண்டர்கள், பெரியாரும் வேண்டும்- பெருமாளும் வேண்டும் என நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து உருவானது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற ஓரிறை கோட்பாட்டை முழக்கமாக கொண்டது திமுக.
திமுகவில் இருந்து உருவானது மதிமுக. திராவிடர் இயக்க கோட்பாடுகளைப் பின்பற்றினாலும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் மதிமுகவை உருவாக்கிய வைகோ உறுதியானவர். தற்போது மதிமுகவை வைகோ மகன் துரை வைகோ வழிநடத்தி வருகிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 3,327 அறிவிப்புகள்! புள்ளி விவரத்தை புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்!

சங்கரன்கோவிலில் வழிபாடு
துரை வைகோ தமது சமூக வலைதளப் பக்கத்தில் ஆலய தரிசனங்கள் குறித்து பதிவிட்டிருந்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சாமி திருக்கோவிலில் தரிசனம் செய்தேன். அடுத்த வருடம் ஆயிரமாவது ஆண்டிணை காண இருக்கும் இத்திருக்கோவில் பிற்கால பாண்டிய மன்னரான உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் மக்களிடையே நிலவிய பெரும் மத பிரச்சினைகளுக்கு தீர்வு தந்த ஆன்மீக தலம்.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சமயத்தில் சிறந்தது சைவமா?வைணவமா? யார் சிறந்தவர் ?அரியா?சிவனா? என்ற விவாதம் மக்களிடையே நிலவிய காலத்தில் இந்த சமய பிணக்கைத் தீர்க்க ஆடி மாத வளர்பிறை நாளில் கோமதி அம்பிகையே தவமிருந்தாகவும் அவரது தவத்தை மெச்சிய இறைவனும், வலது பக்கம் சிவனாகவும்,இடப்பக்கம் பெருமாளாகவும் ஒரே திருமேனியில் காட்சி தந்து, சைவமும், வைணவமும் ஒன்று தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார். அது தான் ஆடித்தபசு திருவிழா.

ஆடி தபசு திருவிழா
தமிழ்நாட்டின் முக்கிய திருவிழாவான ஆடித்தபசு திருவிழா, கடந்த வருடம் கொரோனா பொதுமுடக்க நாட்களில் கொண்டாடப்படுமா என்ற ஏக்கம் மக்களிடையே இருந்தது. இதை மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார். நான் உடனே இந்த விவகாரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.அமைச்சர் அவர்களும் அதை பரிசீலித்து,கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ஆடித்தபசு திருவிழா கொண்டாடவும், ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களும் 50 பேர்கள் வரையில் கலந்து கொள்ளவும் அனுமதி தந்தார். அதை நான் மிக்க மகிழ்ச்சியுடன் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தேன்.

சங்கரன் கோவிலுக்காக போராட்டம்
அதே போல சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலுக்கு சொந்தமான வெள்ளிப் பல்லக்கு காணாமல் போனது. அது குறித்து உரிய விசாரணை நடத்தி, பல்லக்கை கண்டுபிடிக்க வேண்டும் என நம் இயக்கம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர்ந்து போராடியதால் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த போராட்டங்களும் அதன் வெற்றியும் சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பாராட்டினைப் பெற்றது. இப்படி சங்கரன்கோவில் திருக்கோவில் மேம்பாட்டிற்காக பல்வேறு விதத்தில் நம் தலைவரும் இயக்கமும் கடமையாற்றி இருக்கிறது. நேற்றைய திருக்கோவில் தரிசன ஏற்பாட்டை குருசாமி ஸ்டோர் வெங்கடாஜலபதி செய்திருந்தார். திருக்கோவில் அதிகாரிகளும் ஊழியர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

வெள்ளாகுளம் பெருமாள் கோவில்
தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாகுளம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள் ஆலயத்திற்கு சென்றேன்.கடந்த மாதம் 05,06,07, ஆகிய தேதிகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்விற்கு வருகை தருவதாக உறுதி அளித்து இருந்தேன். ஆனால் நமது இயக்க தந்தை வைகோ வின் மாமனிதன் வைகோ" ஆவணப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடையாததால் என்னால் அன்று வர இயலவில்லை. அந்த கோவிலுக்கு சென்று ஶ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாளை வழிபட்டு கிராம பொது மக்களிடம் கலந்துரையாடினேன்.இரண்டு நிகழ்வுகளும் மனதிற்கு நிறைவாக அமைந்தது. இவ்வாறு துரை வைகோ பதிவிட்டிருந்தார்.

பெரியாரும் வேண்டும்.. பெருமாளும் வேண்டும்
அவரது சமூகவலைதளப் பதிவில்தான், கோமதி அம்பாளும் வேண்டும் அறிஞர் அண்ணாவும் வேண்டும்; பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும்..... என நெகிழ்ச்சியுடன் மதிமுக தொண்டர்கள் பதிவிட்டுள்ளனர். அதாவது துரை வைகோவின் ஆலய தரிசனத்தை துளி விமர்சனமும் இல்லாமல் மதிமுகவினர் ஏற்றுக் கொண்டனர் என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அக்கட்சி சீனியர்கள்.












Click it and Unblock the Notifications