‘வாரிசு’ போக்கால் சீனியர்கள் அப்செட்.. 'ஸ்டாலின் சேர்ப்பாரா?’ தடுமாறும் மதிமுக.. கண் வைத்த பாஜக!
சென்னை : மதிமுகவில் ஏற்பட்டு வரும் புகைச்சலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன.
வைகோவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது மகனான துரை வைகோ, மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை நீண்ட யோசனைகளுக்குப் பிறகே கட்சிக்குள் கொண்டு வந்தார் வைகோ.
துரை வைகோவின் வருகையை முக்கிய நிர்வாகிகள் பலர் ஏற்றுக்கொள்ளாத சூழலில், அவர்களை அனுசரித்துச் செல்லாமல், ஆக்ரோஷம் காட்டி வருகிறார் துரை வைகோ. இது பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், கட்சியை விட்டு விலகியுள்ள மதிமுக நிர்வாகிகள் திமுகவில் சேர நினைப்பதாகவும், ஆனால், மதிமுகவினரை சேர்த்து வைகோவுக்கு சங்கடம் ஏற்படுத்த ஸ்டாலின் விரும்பமாட்டார் என்பதால், அடுத்து என்ன செய்வது என தொடர்ந்து விவாதித்து வருகின்றனராம். இதை பாஜக உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வேர்களைத் தேடிப் பயணம்! துரை வைகோவிடம் கண் கலங்கிய மறைந்த மதிமுக நிர்வாகிகள் குடும்பத்தினர்!
மதிமுகவில் வாரிசு அரசியல்
மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும் பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கு அக்கட்சிக்குள் கடுமையாக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அதிகாரப்பூர்வமாக ஒரு பதவியைக் கொடுத்து துரை வைகோ கட்சிக்குள் கொண்டு வரப்பட்டதில் இருந்தே இந்த அதிருப்திகள் வெடித்தன. 1993ல் மதிமுக எனும் கட்சி தொடங்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றே வாரிசு அரசியலை எதிர்ப்பது தான் என்பதால் சீனியர்கள் சிலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
துரை வைகோ எண்ட்ரி
எனினும் வைகோவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், சீனியர்களின் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகும், துரை வைகோவின் எண்ட்ரியை முக்கிய நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். எல்லா கட்சிகளிலும் இருக்கும் வாரிசு அரசியல் மதிமுகவிலும் வருவது இயல்பானது தானே என தொண்டர்களும் ஜீரணித்துக் கொண்டனர். செவந்தியப்பன் போன்ற சீனியர்கள் சிலர் மட்டும் இதனை ஏற்க முடியாமல் எதிர்ப்புக் குரல் கொடுத்ததால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கினார் வைகோ. மற்றபடி கொள்கைப் பிடிப்புள்ள பெரும்பாலான நிர்வாகிகளும் துரை வைகோவின் நுழைவை ஏற்றுக்கொண்டார்கள்.
எதேச்சதிகார பேச்சு
துரை வைகோவும், மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூட்டங்கள் என அரசியல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். ஆனால், சமீபகாலமாக, அவரது நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் இருக்கலாம், மற்றவர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன, வெளியேறலாம் என அவர் எதேச்சதிகார தொனியில் பேசியது நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
எடுத்தெறிந்து பேசுகிறார்
கட்சியில் பெரும்பாலானோரின் எதிர்ப்பை மீறி தலைமையில் ஒரு பெரிய மாற்றம் வரும்போது எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம் தான். அதை தலைமைப் பொறுப்பில் உள்ளவர் சிக்கல் இன்றி தீர்த்து வைப்பதில் தான் அவரது தலைமைப் பண்பு வெளிப்படும். ஆனால், அந்த எண்ணமே துரை வைகோவிடம் துளியும் இல்லை, நிர்வாகிகளை எடுத்தெறிந்து பேசுகிறார் என வெதும்புகின்றனர் நிர்வாகிகள். இதனால் தான் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகவினர் சமீபத்தில் கூண்டோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், மதிமுக ஓரளவுக்கு வலுவாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சியே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகோவை பார்க்கவே முடியல
இத்தகைய முடிவை எடுப்பதற்கு முன்பாக, பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து துரை வைகோவின் செயல்பாடுகள் கட்சிக்குள் மனவருத்தத்தை ஏற்படுத்தி வருவது பற்றிப் பேசுவதற்காக முயற்சி செய்துள்ளனர். ஆனால், வைகோவை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் எளிதில் அணுகக் கூடிய தலைவராக இருந்த வைகோ, துரை வைகோவின் அரசியல் வருகைக்குப் பிறகு சந்திக்கவே முடியாத நிலை ஏற்பட்டதையும் உணர்ந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிர்வாகிகள் ஷாக்
மதிமுக சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் மூலம் முயற்சித்த போதும் வைகோவை சந்திப்பதற்கு வழிகள் பிறக்கவில்லையாம். துரை வைகோவே இந்த முயற்சிகளைத் தடுப்பதாக அறிந்து அவர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதனால் தான் வேறு வழியின்றி கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலக முடிவு எடுத்தனர் என்கின்றனர் காஞ்சி மாவட்ட மதிமுகவினர். அதன்பிறகும், துரை வைகோ தங்களை அழைத்துப் பேசவில்லை என்பதால் மேலும் அப்செட் ஆகியிருக்கின்றனர்.
அதிரடி திட்டம்
இந்நிலையில், கட்சியிலிருந்து விலகியவர்கள், கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனராம். விரைவில் இவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடக்கவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், துரை வைகோவின் எதேச்சதிகாரத்தையும் மதிமுகவிற்குள் நிலவும் வாரிசு அரசியலையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று அதிருப்தியாளர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
திமுகவில் இணையலாமா?
மேலும், தாய்க்கழகமான திமுகவில் நாம் இணைந்துவிடலாமா என்றும் கூட மதிமுக அதிருப்தியாளர்கள் யோசித்துள்ளனர். ஆனால், உடல் நலம் குன்றிய நிலையில் வைகோ இருப்பதால், அவரை சங்கடப்படுத்த திமுக தலைமை விரும்பாது. மதிமுக நிர்வாகிகளை திமுக சேர்த்துக்கொண்டால் வைகோ வருத்தப்படுவார் என்ப்தால் திமுக தலைமை நம்மைச் சேர்க்க விரும்பாது என்றும் அவர்களுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார்கள். இதனால், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விரைவில் ஆலோசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கண்வைத்த பாஜக
இந்த நிலையில், மாற்றுக் கட்சியினரை பாஜகவுக்குள் கொண்டுவருவதை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கும் தமிழக பாஜக, மதிமுகவில் உருவாகியுள்ள இந்த அதிருப்தி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறதாம். விரைவில், பாஜக தரப்பில் இருந்தும் அதிருப்தி மதிமுகவினரை அணுகலாம் என்று கூறப்படுகிறது. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் மிகுந்த மதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவும் நிலை என்பது துன்பகரமானது தான். துரை வைகோ இதையெல்லாம் அறிந்து கவனமாகச் செயல்படுவாரா எனக் குமுறுகிறார்கள் மதிமுகவினர்.