“நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை.. நிர்ப்பந்தத்தால் தான் வந்தேன்” கொந்தளித்த துரை வைகோ
சென்னை: "நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை; மதிமுகவினர் நிர்பந்தம் செய்ததாலேயே வந்தேன்" என துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த நிலையில் இன்று நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. ம.தி.மு.க அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், முதன்மைச் செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, துரை வைகோவின் ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்காத நிலையில், முதன்மைச் செயலாளர் என்றே அவர் பெயர் தீர்மான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. மதிமுகவினர் நிர்பந்தம் செய்ததாலேயே வந்தேன்.
ராஜினாமா நான் கொடுத்தது தான். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நிர்வாகிகள் தங்கள் கருத்தை தலைமையிடம் பிரதிபலிக்கட்டும். ராஜினாமா குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறேன்.
மதிமுக வைகோ, வைகோ தான் மதிமுக. இதில் எந்த மாற்றமும் கிடையாது. என்னால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள், எதனால் பிரச்சனை வந்தது என்பது நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பின் தெரியும். கட்சியை யாரும் இழிவுபடுத்தாதீர்கள் என்பது தான் எனது அறிவுறுத்தல்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதி இல்லை., ஒவ்வொரு கட்சித் தொண்டனும் தளபதி தான். மதிமுகவுக்காகவும் வைகோவுக்காகவும் உழைத்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். உட்கட்சி பிரச்சனை வெளியில் வந்ததே அவரால் தான் என்றும் தேர்தல் நேரத்தில் கட்சி தலைமைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications