23 ஆண்டுகளாக தேர்தல்களில் பரபரப்பை பற்ற வைக்கும் வைகோ- திமுகவின் 1 தொகுதியை ஏற்பாரா? மீண்டும் கலகமா?
சென்னை: தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு வகையில் மிகப் பெரும் பரபரப்பான முடிவுகளை எடுத்து வருபவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தற்போதைய 2024 லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியை ஒதுக்க திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து வைகோ என்ன முடிவு எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பு.
2001 சட்டசபை தேர்தல்.. பாஜகவுக்கு கணிசமான தொகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி ஒதுக்கினார். பாஜகவை விட பெரிய கட்சி மதிமுக.. எங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கியே ஆக வேண்டும் என முரண்டுபிடித்தார் வைகோ. அந்த தேர்தலில் மதிமுகவுக்கு 21 தொகுதிகளை அள்ளி கொடுத்தார் கருணாநிதி. ஆனால் கடைசி நேரத்தில் நாங்கள் கேட்ட 3 தொகுதிகள் தரவில்லை. அதனால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டோம் என அதிரடியாக அறிவித்தார் வைகோ. அத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை அறிவிக்காமல் இதர தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்தது.

2001-ல் கருணாநிதி தந்த விளக்கம்: அப்போது விளக்கம் தந்த கருணாநிதி, திமுக - மதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் வைகோ ஒன்றுமில்லாததைப் பெரிதாக்குகிறார். மதிமுகவுக்கு திமுக 18 தொகுதிகளை முதலில் வழங்கியது. ஆனால் அதை நிராகரித்தார் வைகோ. அவர் மேலும் 3 தொகுதிகள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.அப்போது பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டியுள்ளதாகக் கூறினோம். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை. பின்னர் 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அப்புறம் வேண்டாத தொகுதிகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.அதனால்தான் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற வேண்டுமானால் வெளியேறிக் கொள்ளலாம் என்று கூறினோம் என்றார்.
வைகோ சொன்னது என்ன?: ஆனால் 2001 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ஈரோடு நிகழ்ச்சியில் பேசிய வைகோ, நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இரண்டு வலுவான சக்திகளை எதிர்த்து நின்று பெரும் தோல்வியை நாம் தழுவினாலும், பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்கிறோம். இது இந்த இயக்கத்தின் வெற்றி. திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட, 15 தினங்களில் தேர்தலைச் சந்தித்தோம். 30 இடங்களில் கூட போட்டியிட தகுதியற்ற கட்சி என திமுக கருதி உதாசீனப்படுத்தினாலும், பல தொகுதிகளில் 15 ஆயிரம் ஓட்டுக்களுக்கும் மேல்பெற்று எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம். திராவிடக் கொள்கை தமிழகத்தில் மங்கிப் போய் விட்டது. இந்தக் கொள்கையின்படி நடக்கும் மதிமுக, அதை சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்யும். திமுகவை ஒரு பகையாளியாக மதிமுக என்றும் நினைக்கவில்லை, அதிமுகவும் எங்களுக்கு எதிரி அல்ல. மதிமுக தனது பணியைத் திட்டமிட்டு செய்து வருகிறது. மக்கள் நம்பிக்கையைப் பெறும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார்.
திமுக மீது கோபம்- அதிமுகவிடம் அடைக்கலம்: இதனைத் தொடர்ந்து 2006 சட்டசபை தேர்தலில் திமுகவிடம் வைகோ கேட்டது 35 தொகுதிகள். இதனை திமுக திட்டவட்டமாக ஏற்க மறுத்தது. உடனடியாக திமுக கூட்டணியை விட்டு மீண்டும் வெளியேறி ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக அணியில் ஐக்கியமானார் வைகோ. அவர் கேட்ட 35 தொகுதிகளையும் கொடுத்தார் ஜெயலலிதா. அப்போது 6 இடங்களில் மதிமுக வென்றது. 2009 தேர்தலிலும் அதிமுக அணியில்தான் வைகோ இருந்தார்.
ஜெயலலிதா பிடிவாதம்- தேர்தலையே புறக்கணித்த வைகோ: 2011 சட்டசபை தேர்தலிலும் அதிமுக அணியில்தான் வைகோ நீடித்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் மீண்டும் 35 தொகுதிகளைக் கேட்டார் வைகோ. ஆனால் ஜெயலலிதாவோ அப்படி எல்லாம் தர முடியாது என கை விரித்தார். ஒருவழியாக 21 தொகுதிகளையாவது கொடுங்க என கேட்டுப் பார்த்தார் வைகோ. ஆனாலும் ஜெயலலிதாவோ திட்டவட்டமாக வைகோவின் கோரிக்கையை நிராகரித்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் சட்டசபை தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ.
மக்கள் நலக் கூட்டணி: 2016 சட்டசபை தேர்தலில் திமுக அணியில் மதிமுக இடம் பெறும் என எல்லோரும் எதிர்பார்க்க திடுதிப்பென மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் வைகோ. அந்த கூட்டணி தமிழ்நாடு சரித்திரத்தில் கேலிப் பொருளாகிப் போனதுதான் சோகம்.
உதயசூரியன் சின்னத்தால் நெருக்கடி: 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக இடம் பெற்றது. அத்தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் மதிமுக போட்டியிட வேண்டும் என திமுக தலைமை நெருக்கடி தந்தது. இதனால் வைகோ அதிர்ந்துதான் போனார். அப்போதும் வைகோ என்ன முடிவெடுப்பாரோ? என்கிற பரபரப்பு நிலவியது. ஒருவழியாக திமுகவின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் வைகோ.
மீண்டும் கலகமா? தேர்தல் புறக்கணிப்பா?: தற்போது 2024 லோக்சபா தேர்தலில் 6 தொகுதிகளை அடையாளம் கண்டு 3 தொகுதிகள் அதாவது 2 லோக்சபா சீட், 1 ராஜ்யசபா சீட் தர வேண்டும் என திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது வைகோவின் மதிமுக. ஆனால் திமுக தலைமையோ ஒரே ஒரு தொகுதியைத்தான் மதிமுகவுக்கு தர முடியும் என்கிறதாம். கடந்த காலங்களைப் போலவே "கலகம்" செய்துவிட்டு வெளியேறுவதா? அல்லது ஆகக் குறைந்தபட்சம் 2 தொகுதிகளையாவது கேட்டுப் பெறுவதா? அல்லது "தேர்தலில் போட்டியில்லை- திமுக அணிக்கு ஆதரவு" என புதிய அதிரடி முடிவை அறிவிப்பதா? என படுதீவிரமாக யோசிக்கிறாராம் வைகோ.












Click it and Unblock the Notifications