சென்னையில் நாளை முதல் ஓடப்போகும் மெட்ரோ ரயில்கள்.. ரயில்கள் இயங்கும் நேரமும் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற மாவட்டங்களை தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நாளை முதல் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் நாளை காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப இந்த நேரம் நீட்டிக்கப்படும். காலை 9 மணி முதல் காலை மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து மெட்ரோ நிலையங்களில் மற்றும் மெட்ரோ ரயில்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. மெட்ரோ நிலைய நடைமேடைகளில் பயணிகள் வருகை, வெளியேறுதல் மற்றும் தனிமனித இடைவெளியை கண்காணிக்க தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.