குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் 8 மாவட்ட விவசாயிகள்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.
சென்னை : குறுவை சாகுப்படிக்காக நடப்பாண்டு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 97.33 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறப்பது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ''விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்க இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். அதேபோல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு, தற்போது 97.13 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61.43 டிஎம்சி ஆகவும் உள்ளது. நடப்பாண்டு (2021-2022) தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் அதாவது 2.11 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கும் முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து, இந்தாண்டு முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65.11 கோடி மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், அனைத்து பகுதி டெல்டா பாசன விவசாயிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க இயலும். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு இருக்கும். இதனால் கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யக்கூடிய கனமழையால் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜோராக தொடங்கியுள்ள நிலையில் ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து 165 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 88 ஆவது ஆண்டாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.