எம்.ஜி.ஆர் 108வது பிறந்தநாள் இன்று.. தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை.. அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 17ம் தேதி அன்று அமைச்சர்கள் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் ஜனவரி 17ம் தேதி அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
எம்ஜிஆர்: புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கையில், கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 17.1.1917 அன்று கோபாலன் மேனன் சத்யபாமா தம்பதியருக்கு 5வது மகனாக பிறந்தார். தமது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார். 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின் முடிசூடா மன்னராக விளங்கினார்.
கலைஞர் 1950ஆம் ஆண்டு திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நடித்த சிறந்த திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரை 'இதயக்கனி' என்று அழைத்தார். நாளடைவில் அனைத்து தரப்பு மக்களாலும் புரட்சித் தலைவர் என அழைக்கப்பட்டார்.
திராவிட கொள்கை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953 ஆம் ஆண்டு தம்மைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தாம் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, 1988 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான 'பாரதரத்னா' விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், அன்னாரைப் பெருமைப்படுத்துகின்ற வகையில், கலைஞர் 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார்.
மருத்துவ பல்கலை: கலைஞரால் சென்னை கிண்டியில் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டியதோடு. அன்னாரின் திருவுருவச் சிலையினையும் 31.7.1998 அன்று திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17 ஆம் நாள், ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மேயர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி: அதேபோல,எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்கு மிக நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம். ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.
பணிகள்: அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம். ஆர்வத்தோடு தொண்டாற்றுவோம், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் நல்லாட்சியை மலரச் செய்வது, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications