நாய் என்ன பாவம் பண்ணுச்சு.. பிடிக்க விட மாட்டோம்.. ஹைகோர்ட் வாசலில் அதிகாலையிலேயே நாய்பிரியர்கள் போராட்டம்
சென்னை: சென்னையில் அதிகாலையில் சாலையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது திடீரென திரண்ட நாய்பிரியர்கள், மாநகராட்சி வாகனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருபக்கம் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்து விட்டதாகவும், இதனால் தெருநாய்களை பிடித்து செல்லுமாறும் பொதுமக்கள் புகார் வைத்து வரும் நிலையில் மறுபுறம் நாய்களை பிடித்து செல்ல நாய்பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தெருநாய்கள் தொல்லை
தமிழகம் முழுவதுமே தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிலும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவே உள்ளன. ஏதாவது ஒரு தெருவுக்குள் நுழைந்துவிட்டால், ஏரியாவில் இருக்கக்கூடிய மொத்த நாய்களும் சுற்றுப்போட்டு, மரண பீதியை ஏற்படுத்துகின்றன.
இரவு நேரங்களில் மட்டுமில்லை. பகலில் கூட தெருக்களில் நடந்து செல்பவர்களை நாய்கள் கூட்டாக கடிக்க வருவதும், சிறுவர் சிறுமிகளை கடிப்பதும் என தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சம் நாய்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தொடர்ந்து புகார்
ஒருபக்கம் நடவடிக்கை எடுப்பதாக சொன்னாலும், தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்றும், நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்து விட்டதாகவே பொதுமக்கள் முன்வைக்கும் புகாராக உள்ளது.
தெருக்களில் மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் நாய்கள் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. இவற்றை சென்னை மாநகராட்சி அவ்வப்போது வலை வீசி பிடித்து வருகிறது. ஆனாலும் மாநகராட்சி வண்டியை பார்த்ததுமே நாய்கள் ஓட்டம் பிடித்து எங்கேயாவது பதுங்கிக் கொள்வதும், பிறகு வண்டி போன பிறகு பொறுமையாக வருவதையும் பார்க்க முடிகிறது.
சாலையில் அமர்ந்து போராடிய நாய் பிரியர்கள்
இன்னொரு பக்கம் நாய்பிரியர்களும் நாய்களை பிடித்து செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், சென்னையில் நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். அப்போது திடீரென திரண்ட நாய்பிரியர்கள், மாநகராட்சி வாகனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் அதிகாலையில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"கொலை பண்ணுறாங்க... கொள்ளையடிக்கிறாங்க... அவங்கள பிடிச்சு போடுங்க... கேட்க யாரும் இல்லை... நாய்களை பிடிச்சிட்டு போறீங்களா?... பகலில் வந்தால் தெரிந்துவிடும் என்று நள்ளிரவில் வந்து பிடிக்கிறார்கள்... கருத்தடை செய்யப்பட நாய்களை ஷெல்டருக்கு கொண்டு போய் என்ன செய்யப் போகிறார்கள்?" என்றும் நாய்பிரியர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications