தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?.. முதல்வர் சொன்னது "இதுதான்".. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை செய்யுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. முதல் அலை ஓய்ந்த பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை தீவிரமடைந்த பின்னர் அவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது அலையும் முடிந்து தற்போது மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த நிலையில் கொரோனா கேஸ்கள் லேசாக உயர்ந்து வருகின்றன.

மாணவர்கள் செல்லவில்லை
எனினும் பள்ளிக்கு ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் செல்லாததால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் முழுமையாக திறப்பது, அதாவது 1 முதல் 8ஆம் வகுப்புகளும் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய விஞ்ஞானி டாக்டர் சவுமியா சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு இயற்கையாகவே நிறைய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் எந்த சிரமமும் இருக்காது. பள்ளிகள் மூலம் கொரோனா பரவும் என்பது தவறான கருத்து என்றனர்.

ஸ்டாலின் பரிந்துரை
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை என்பதால் தீபாவளி கழித்து மேற்கண்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

காந்தி ஜெயந்தி
இந்த நிலையில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சியில் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் இருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். அவர் கூறுகையில் நவம்பர் 1-ஆம் தேதி 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.

அறிக்கை
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர். இதை நான் முதல்வரிடம் வழங்கிய போது அவர் சொன்னது ஒன்று தான் இது குழந்தைகள் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம் மருத்துவ குழு என்ன சொல்கிறார்களோ அதை நாம் முழுமையாக கடைபிடிப்போம் என்று கூறினார். பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications