ஜல்லிக்கட்டு.. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! நெறிமுறைகள் மாறுமா?
சென்னை : ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும் 22ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கால்நடைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களிலும், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள்.

ஜல்லிக்கட்டு வழக்கு
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்க கோரிக்கைகளும் எழுந்தன. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உறுதி
இந்நிலையில், பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனினும், இந் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதிபட தெரிவித்துள்ளதால், ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றே கூறப்படுகிறது.

அமைச்சர் ஆலோசனை
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக கால்நடைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (டிசம்பர் 22) ஆலோசனை நடத்த இருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியின் போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுடன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications