கடும் டிராஃபிக்கில் சிக்கிய அமைச்சரின் கார்- இறங்கி வந்து.. உறுதியளித்த பிறகே மறியலை கைவிட்ட மக்கள்!
செங்கல்பட்டு : மறைமலைநகர் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அளித்த நிலையில், வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video
பொதுமக்கள் நடத்திய மறியலால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரும் சிக்கியது.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
இதையடுத்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வீடுகளை அகற்றாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே மறியல் கைவிடப்பட்டது.
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 7 குடியிருப்புகள் வருவாய்த்துறை மூலம் நீர்நிலைகள் இருப்பதால் இடிக்கப்பட்டது. மீதமுள்ள குடியிருப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்கள் காலி செய்ய வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு மாத காலமாக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று முதல் மின்சாரத் துறை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மின்சாரம் பொருத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளனர். இதேபோல் வருவாய்த்துறை ஊழியர்கள் குடிநீர் குழாய் இணைப்புகளை கணக்கீடு செய்தனர். இதனையடுத்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அமைச்சரின் கார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதன் காரணமாக 10 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் காரும் சுமார் 15 நிமிடம் சிக்கியது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
காரில் அமர்ந்திருந்து பார்த்து பொறுமையிழந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் விஷயத்தைக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். மேலும், இந்த பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சரிடம் நேரில் பேசுவதாகவும் அந்த மக்களிடம் தெரிவித்தார்.
அகற்ற மாட்டோம்
குடியிருப்புகளை காலி செய்யாத வண்ணம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்வதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ், அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார். இதனையடுத்து 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.