எம்ஜிஆரை துரோகி என்ற துரைமுருகனை, வானளாவ புகழ்ந்த ஓபிஎஸ்.. கே.சி.பழனிசாமி அதிர்ச்சி.. கண்டனம்
சென்னை: எம்ஜியாரை துரோகி என்று கூறிய அமைச்சர் துரைமுருகனை எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், முனுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசியது கண்டிக்கத்தக்கது என்று, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரான முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்ணா காலத்தில் சம்பத், அதன்பின் எம்ஜிஆர், பின்னர் கோபால்சாமி (வைகோ) என்று, எத்தனை காலத்திற்குத்தான் துரோகிகளை பார்த்துக் கொண்டிருப்பது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் அந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தின்போது பேசியிருந்தார்.
சேகர் ரெட்டி டைரி.. ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்களுக்கு பறந்த நோட்டீஸ்.. வருமான வரித்துறை செக்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கருத்தை தெரிவித்திருந்தார்.
துரைமுருகனை புகழ்ந்த அதிமுக தலைவர்கள்
அதேநேரம், சமீபத்தில் சட்டசபையில் துரைமுருகனின் 50 ஆண்டு கால அரசியலை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசியிருந்த அதிமுக தலைவர்கள், துரைமுருகனை வானளாவ புகழ்ந்திருந்தனர். முனுசாமி பேசுகையில், கொஞ்சமும் மாறாமல் இன்றுவரை இந்த இயக்கத்திற்கு நல்ல விசுவாசியாக இருக்கின்ற ஒரு திராவிட இயக்கத்தின் முன்னோடியான துரைமுருகனை நான் மனதார பாராட்டுகிறேன் என்று முனுசாமியும், "எல்லோருடைய இதயங்களையும் கவர்ந்தவர் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன். 2001 முதல் அண்ணன் நடவடிக்கையை கவனித்து வருகிறேன். எல்லோரிடமும் அன்பு காட்டும் உயர்ந்த உள்ளம்தான் துரைமுருகன்" என்று ஓ.பன்னீர் செல்வம் பேசியிருந்தார்.
அதிமுக உணர்வாளர்கள் வேறு
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் காணொளி வாயிலாக பேசிய கே.சி.பழனிச்சாமி பேசுகையில், துரைமுருகனை பாராட்டி பேசியவர்களை வைத்து அதிமுகவை தப்பாக நினைத்து விடாதீர்கள். உண்மையான அதிமுக உணர்வாளர்கள், எம்ஜிஆர் வழி வந்தவர்கள், இந்த இயக்கத்தை பாதுகாத்து நிற்கிறார்கள். திராவிட இயக்க வரலாறு துரைமுருகனுக்கு நன்கு தெரியும். துரைமுருகனுக்கு பணம் கொடுத்து கல்லூரிப்படிப்பை முடித்து வைத்தவர் எம்ஜிஆர். அவர்தான் படிக்க வைத்தார். புரட்சித் தலைவருக்கு துரோகம் செய்தது துரைமுருகன்தானே.
சொத்து கணக்கு கேட்ட எம்ஜிஆர்
அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகவும், முதல்வராகவும் கருணாநிதியை ஆதரித்தது எம்ஜிஆர். அல்லது நாவலர் முதலமைச்சராக வந்திருப்பார். காமராஜர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால், வெற்றி போய் விடும் என்பதற்காக, 1972 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல் 1971ஆம் ஆண்டு முன்கூட்டியே கருணாநிதியால் நடத்தப்பட்டது. எம்ஜிஆர் அப்போது செய்த தீவிர பிரச்சாரத்தால் திமுக வெற்றி பெற்றது. திமுகவை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சென்று வளர்த்தது எம்ஜிஆர் என்று பேரறிஞர் அண்ணா பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் தன்னுடைய மகன் மு.க.முத்துவை சினிமாவுக்கு கொண்டு வந்து எம்ஜிஆர் புகழை மறைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருணாநிதி.
எம்ஜிஆரை கடவுள் என்றவர் துரைமுருகன்
காமராஜ் அவர்கள் திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். எனவே அமைச்சர்கள் அனைவரும் சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று எம்ஜிஆர் வலியுறுத்தினார். இப்படி எம்ஜிஆர் கூறியதற்காக அவரை திமுகவிலிருந்து நீக்கியது திமுக. எம்ஜிஆராக கட்சியை விட்டு விலகவில்லை. அவரை துரோகி என்பதை கண்டிக்கிறேன். துரைமுருகன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டசபையில் அவர் நடந்துகொண்ட விதம். அவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி போன்றவர்கள் புகழ்ந்து பேசலாம். ஆனால் இதுதான் அதிமுக என்று குறைத்து மதிப்பிடாதீர்கள். சட்டசபைக்குள் எம்ஜிஆர் நடந்து வந்தால் அவரது எதிரே கூட துரைமுருகன் வரமாட்டார். அந்தப்பக்கமாக ஓடிவிடுவார். இதை அவரே பலமுறை கூறியிருக்கிறார். கருணாநிதியை தலைவர் என்று கூறியவர் துரைமுருகன். அப்படி என்றால் நான் யார் என்று எம்ஜிஆர் ஒரு முறை கேட்ட போது, "நீங்கள் எனது கடவுள்" என்று கூறியவர் துரைமுருகன். ஏனென்றால் துரைமுருகனை படிக்க வைத்து ஒரு மனிதராக உருவாக்கியது எம்ஜிஆர். அவரை விமர்சனம் செய்து துரைமுருகன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நீர்பாசனத் துறை
நீர்ப்பாசனத் துறையில் துரைமுருகன் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. பொதுப்பணித்துறை அவருக்கு தேவைப்படுகிறது. எம்ஜிஆர் பற்றி ஏதாவது தப்பாக பேசினால் தான் முக்கியத்துவம் பெறலாம் என்று துரைமுருகன் நினைத்து பேசியிருக்கிறார். இவ்வாறு கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார். துரைமுருகன் எம்ஜிஆர் குறித்து மோசமாக விமர்சனம் செய்ததற்கு, அதிமுக தலைவர்கள் ரியாக்ட் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.