அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்.. சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது புகார் இருக்கிறது. இந்நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வரும் 15ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 2007-2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீது புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.40 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மீது புகார் எழுந்திருந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து இருவரையும் வேலூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ஆஜரான துரைமுருகன் சார்பு வழக்கறிஞர், ஏற்கெனவே வழக்கு தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவியின் சொத்து விவரங்கள், வருமான வரி கணக்குகள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
எதிர்தரப்பில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இதனையடுத்து அவரது மனைவிக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை வரும் 15ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications