சென்னை -சேலம் 8 வழிச்சாலை அமைகிறதா? அரசு நிலைப்பாடு இதுதான்! சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
சென்னை: சென்னை -சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக என்ன நிலைப்பாடு எடுத்ததோ, இப்போதும் அதே நிலைப்பாடு தான் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை குறித்து பகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே இந்த திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு மிக திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை -சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் விளக்கியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

8 வழிச்சாலை
சென்னை -சேலம் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்திற்கு அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட இதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பசுமை வழிச்சாலை என்ற பெயரை சூட்டிவிட்டு இருக்கின்ற பசுமைகளை எல்லாம் அழிக்கும் திட்டம் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக போராட்டம்
இதனிடையே மக்களின் கருத்தைக் கேட்காமல் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த முனைந்த அதிமுக அரசை கண்டித்து திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது போராட்டங்கள் கூட நடத்தின. இன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலு, இதே திட்டத்தை கண்டித்து திருவண்ணாமலையில் பெரியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கூட நடத்தியிருந்தார்.

அரசின் நிலைப்பாடு
இந்நிலையில் சென்னை -சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ இன்றும் அதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே இந்த திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலு மிக திட்டவட்டமாக சட்டசபையில் கூறியுள்ளார்.

முக்கியமான ஒன்று
சென்னை -சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் விளக்கியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதனிடையே இந்த திட்டம் தொடர்பாக சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications