அவரவர் சவுகரியத்துக்கு யூகிக்காதீங்க! நாங்க எப்ப அப்படிச் சொன்னோம்! ட்விஸ்ட் வைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்
சென்னை: மாவட்டங்கள் பிரிக்கப்படும் என எப்போது நாங்கள் சொன்னோம் என்றும் புதிய மாவட்டங்கள் தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக தான் கூறினேன் எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று இன்னும் அறிவிக்காத போதே, இதை அதோடு இணையுங்கள், அதை இதோடு இணையுங்கள் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல என பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 11வது நாள் கூட்டம் விறுவிறுப்பாக இன்று நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பேசிய மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், பழனியை புதிய மாவட்டமாக உருவாக்கினால் அதில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளை சேர்க்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 2 நாட்களாக தனது முகாம் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மடத்துக்குளம் தொகுதியை புதிதாக உருவாக்கப்படும் பழனியுடன் சேர்க்கக் கூடாது என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
பழனியை புதிய மாவட்டமாக உருவாக்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றும் ஆனால் மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை பகுதிகளை பழனியில் இணைத்துவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்டங்கள் பிரிக்கப்படும் என எப்போதும் நாங்கள் சொன்னோம் என ட்விஸ்ட் வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப புதிய மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கருத்துரு அரசின் கவனத்தில் இருப்பதாக மட்டுமே சொன்னதாகவும் பிரிக்கப்படும் எனக் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.
நிலைமை இப்படியிருக்க அவரவர் சவுகரியத்துக்கு யூகித்து பத்திரிகைகள், யூடியூப்களில் பார்த்துவிட்டு பேசுவது சரியல்ல என்றும், மாவட்டங்களை பிரிக்கின்ற போது முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கலந்து பேசி ஆலோசனைகளை பெற்று முடிவெடுப்பார் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications