தப்பா பேசினால் சங்கடப்படுவீங்க.. அதிகாரியிடம் டென்ஷனான கேஎன் நேரு! ஆலோசனை கூட்டத்தில் திடீர் கோபம்
சென்னை: சென்னையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு பேசினார். அப்போது கூட்டத்தில் 2 பேர் பேசி கொண்டிருந்ததை கவனித்த கேஎன் நேரு, ‛‛ஏங்க.. உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்க 2 பேரும் தனியாக பேசுறீங்க? நான் பேசும்போது அங்க பேசிக்கிட்டு இருக்கீங்க..மைக்கில் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னை பாருங்க.. இவ்வளவு பேர் முன்னால் தப்பா ஏதாவது பேசினால் சங்கடப்படுவீங்க'' என கடிந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் கேஎன் நேரு தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் பேசும்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் தரமான முறையில் முடிக்க வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் அனைத்து இடங்களிலும் பணி செய்ய வேண்டும் என்று கூறி கொண்டிருந்தார்.
கேஎன் நேரு பேசி கொண்டிருந்தபோதே, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், இன்னொருவருடன் பேசி கொண்டிருந்தார். இதனை கவனித்த கேஎன் நேரு, ‛‛ஏங்க.. உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்க 2 பேரும் தனியாக பேசுறீங்க? உங்களை தான் கேட்கிறேன். என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? பக்கத்தில் உள்ளவரை கூப்பிடுங்க.. இங்கே கவனிங்க.. உங்களுக்கு எந்த ஊர்? எங்க கவனிக்கிறீங்க?

எந்த ஊரு எங்க பார்க்கிறீங்க? என்னை பாருங்க.. நான் பேசும்போது அங்க பேசிக்கிட்டு இருக்கீங்க.. மைக் சரியில்லையா? மைக்கில் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னை பாருங்க.. இவ்வளவு பேர் முன்னால் தப்பா ஏதாவது பேசினால் சங்கடப்படுவீங்க.. நான் எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். யார் யார் என்ன என்ன செய்றாங்க? என்பதை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்.
அதிகாரிகள் அனைவரும் இங்கு பேசக்கூடிய விஷயத்தை கவனிக்க வேண்டும். எதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது? என்பது பற்றி அமைச்சர், துறை செயலாளர் உங்களின் தலைவர் இங்கு பேசுகிறார். இப்படியான சூழலில் நீங்கள் அங்கு தனியாக பேசி கொண்டிருந்தால் சரியாக இருக்காது'' என கடிந்து கொண்டார். அமைச்சர் கேஎன் நேருவின் இந்த டென்ஷனால் ஆலோசனை கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications