பச்சை துண்டுடன் வந்த எம்.ஆர்.கே.! தென் மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் அதிரடி
சென்னை: தமிழக சட்டசபையில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தென் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு நிவாரண நிதி வழங்கப்படுவது குறித்தும் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் தனி வேளாண் பட்ஜெட் முதன் முதலாக தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளிலும் தனியாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும் மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ கூடாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தனது உரையில், வேளாண் பட்ஜெட் உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். உழவர்களை உச்சத்தில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு.
வேளாண் பணிகளுக்கான எந்திரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறோம். 2022- 2023 ஆம் ஆண்டு 115 மெட்ரிக் டன்னாக உணவு உற்பத்தி அதிகரித்துள்ளது. 2020-2021ஆம் ஆண்டு 152 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி , 2022-2023 ஆம் ஆண்டு 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன . நடப்பாண்டில் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்; நுண்ணீர் பாசனம் உள்ளிட்டவைகளுக்கு மானியம் வழங்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுச் செடிகள் விற்பனை மையம் அமைக்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுகைகள் வழங்க ரூ6 கோடி மானியம் வழங்கப்படும். தென் மாவட்ட மழை பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும். 2 லட்சம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆடா தொடா, நொச்சி நடவு செய்ய ரூ1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications