மருத்துவர் பாலாஜி நலமாக இருக்கிறார்.. போலி காரணத்தை சொல்லி தாக்குதல் நடந்துள்ளது: மா.சுப்பிரமணியன்
சென்னை: மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார் என்றும் சிகிச்சை பெற்று வரும் அவருடன் வீடியோ காலில் பேசினேன் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்தில் குறைபாடு என்ற போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் பிரேமாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்தாண்டு மே முதல் நவம்பர் மாதம் வரை, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஆனால், சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் 3 மாத சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை, வெளிநோயாளி பிரிவில் மருத்துவரை சந்திக்க 4 பேருடன் விக்னேஷ் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியிடம் சுமார் அரை மணிநேரம் விக்னேஷ் பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில், தான் கொண்டு சென்ற கத்தியால், மருத்துவர் பாலாஜியின் இடது கழுத்தில் 2 முறை குத்தியுள்ளார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேற முயன்ற விக்னேஷை, பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து விவகாரத்தைக் கண்டித்தும் பணியில் உள்ள மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவ சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றதாக அமைச்சர் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். மருத்துவர் பாலாஜியுடன் வீடியோ காலில் பேசினேன் மருத்துவ சிகிச்சையில் குறைபாடு எனக் கூறி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டத்தை திரும்பப் பெற்றனர். பேச்சுவார்த்தை முடிந்து மருத்துவர்கள் நிறைவுடன் சென்றனர். மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவ சங்கங்கள் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிண்டி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வட்டார மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
அரசு மருத்துவர்கள் விரோதப்போக்குடன் யாருக்கும் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். மருத்துவத்தில் குறைபாடு உள்ளதாக போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications