Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் மது பாட்டில்.. 10 வருசமா சும்மா இருந்துட்டு கொதிக்கிறீங்களே? எடப்பாடி மீது அமைச்சர் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலி மது பாட்டில்கள் குறித்து 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு தற்போது கொதிப்பதா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உயர்நீதிமன்ற ஆணைப்படி, காலி பாட்டில்களை திரும்பப் பெறும் டெண்டரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கோராமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

tasmac liquor shop tn government

டாஸ்மாக் நிறுவனம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் புள்ளி கோரிய நிலையில் ஒவ்வொரு டாஸ்மாக் குடோனுக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் முன்வைப்புத் தொகை செலுத்தி டெண்டரில் பலர் கலந்து கொண்டதாகவும், பிப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலேயே 'டெக்னிக்கல் பிட்டை' அதிகாரிகள் திறந்துவிட்டதாகவும், ஆனால், டெண்டர் போட்டவர்களிடம் பேரம் படியாததால், 'பைனான்ஸ் பிட்டை' திறக்காமல் கடந்த 5 ஆம் தேதி டெண்டரை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. மற்ற மலை சார்ந்த பகுதிகளில் 15.06.2022 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இதர மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து இதுவரை மொத்தமாக 9 மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தும் பொருட்டு மண்டலங்கள் வாரியாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் காலி பாட்டில்கள் மூன்றாம் நபரிடம் செல்லாமல் இருப்பதற்காகவும், காலி பாட்டில்கள் உடைக்கப்படாமல் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் சென்னை உயர்நீதிமன்றம் காலி பாட்டில்களை மதுபான உற்பத்தி நிறுவனங்களே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டி அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் ஏற்கெனவே கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையாக மதுபான உற்பத்தி நிறுவனங்களை அழைத்து காலி பாட்டில்களை அவர்களே சேகரம் செய்ய வேண்டுமென்ற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுபான உற்பத்தியாளர்களும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது குறித்து இசைவு தெரிவிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வயல்களிலும் சாலைகளிலும் பூங்காக்களிலும் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்காகத்தான் திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏன் எடப்பாடி பழனிசாமி இதை சிந்திக்கவில்லை? இப்பொழுது குற்றச்சாட்டுகள் சொல்லக்கூடியவர்கள் அந்த 10 ஆண்டு காலத்தில் இதை நடைமுறைபடுத்தியிருக்கலாமே?

காலி பாட்டில்கள் வயல்களிலும் பொது இடங்களிலும் வீசப்பட்டதால் அந்த நேரத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் என்ன ஆனது? என்று கேட்க வேண்டியுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வங்கிகள் மூலமாக மின்னணு கருவிகள் (Point of Sale Machines) நிறுவப்பட்டு மின்னணு பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் Billing Machine வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விற்பனைக்கு ஏற்றார்போல் ஒரு மதுபான கடைக்கு இரண்டு முதல் நான்கு வரை பொருத்தும் பொருட்டு 12,000 பில்லிங் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மதுக்கூடங்களுக்கு ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் முடிவு எடுக்கப்படுகிறது. உங்கள் ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் டெண்டர் முறை இருந்ததா? காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதை பற்றி 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இப்படிப்பட்ட ஒரு அறிக்கை விடுவது எந்த வகையில் ஏற்புடையது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+