அமைச்சர் மகனுக்கு திமுகவில் மாநகரச் செயலாளர் பதவி! பரபரக்கும் உட்கட்சித் தேர்தல் முடிவுகள்!
சென்னை: திமுகவில் மாநகரச் செயலாளர் பதவியிடங்களுக்கான உட்கட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதை வைத்து பல இடங்களிலும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடலூர், தஞ்சை, தாம்பரம் என பல ஊர்களிலும் மாநகரச் செயலாளர் பதவியிடங்களுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில் இன்று வெளியாகியுள்ள முடிவு அறிவாலயத்தை நோக்கி அதிருப்தியாளர்களை படையெடுக்க வைத்துள்ளது.
இதனிடையே பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் கிளைக்கழகம் தொடங்கி மாநகரம், மாவட்டம் வரை வரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகரச் செயலாளர் பதவியிடங்களுக்கான உட்கட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் பல இடங்களில் யாரும் எதிர்பார்க்காத புது முகங்கள் மாநகரச் செயலாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாநகரச் செயலாளராக இருந்த நீலமேகம் எம்.எல்.ஏ.வுக்கு பதில் மேயர் சன் ராமநாதன் தஞ்சை மாநகரச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பலருக்கும் புரோமோஷன்
இவர் இளைஞரணியில் இருந்து மாநகரச் செயலாளராக புரோமோஷன் செய்யப்பட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதேபோல் கடலூர் மாநகரச் செயலாளராக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் கே.எஸ்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர் தரப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நெல்லை மாநகரச் செயலாளர் பதவிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆளுக்கு ஒன்று
திமுக ஐடி விங்கிலிருந்து இவர் புரோமோஷன் செய்யப்பட்டு கட்சியின் முக்கியப் பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகரத்தை பொறுத்தவரை இரண்டாக பிரித்து ஒன்றுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளரான மேயர் அன்பழகனும் மற்றொன்றுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் ஆதரவாளரான மதிவாணனும் மாநகரச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அமைச்சர் மகன்
இதேபோல் சென்னை நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம் மாநகரச் செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கடுமையாக முயற்சித்த நிலையில் தனது லாபி மூலம் இந்தப் பதவியை கைப்பற்றிவிட்டார் எஸ்.ஆர்.ராஜா. திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகரச் செயலாளராக பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தேர்வாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications