காலம் பொன் போன்றது! ஃபேஸ்புக்கில் நேரத்தை செலவழிக்காதீர்! அமைச்சர் பெரியகருப்பன் அட்வைஸ்!
சென்னை: இளைஞர்களும், மாணவர்களும் முகநூலில் நேரத்தை செலவழிக்க வேண்டாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவுரை வழங்கியுள்ளார்.
காலத்தின் அருமையை எடுத்துக் கூறியதுடன் ஃபேஸ்புக்கில் செலவழிக்கும் நேரத்தை புத்தகங்கள் வாசித்தலில் செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

ஒவ்வொருவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கிராமப் பகுதிகளில் கூட புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஊராட்சி தோறும் நூலகங்களை கட்டிக்கொடுத்தவர் கருணாநிதி எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
கிராமப்புற மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் செய்தித்தாள்கள், வார இதழ்கள் மூலம் நாட்டு நடப்புகளையும், செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் நூலகங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சி இல்லாத நேரத்தில் நூலகங்களுக்கு பேராபத்து வந்ததாகவும் நூலகங்கள் இடிந்து விழும் நிலைக்கு சென்றதாகவும் கூறிய அவர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நூலகங்கள் சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முகநூலில் பொழுதை கழிப்பதைக் காட்டிலும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவாற்றலை அதிகரித்துக்கொள்ள முடிவதுடன் வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என அட்வைஸ் வழங்கினார்.












Click it and Unblock the Notifications