"நிர்மலா சீதாராமனுக்கு என்ன அட்வைஸ் தருவீர்கள்.?" வந்து விழுந்த கேள்வி! பிடிஆர் கொடுத்த அதிரடி பதில்
சென்னை: மத்திய நிதி அமைச்சர் தொடர்பான கேள்விக்குத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய பதில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் தான் அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் வருவதால் இதைத் திராவிட மாதமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.
இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திமுக ஐடி விங் சார்பில் இன்று ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
மறக்கவே முடியாது.. அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறிய கருணாநிதி.. நினைவுகளை பகிர்ந்த பிடிஆர்
திராவிட பொருளாதாரம்
திராவிட பொருளாதாரம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ட்விட்டர் ஸ்பேஸில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாடு பொருளாதாரம் குறித்தும் வரும் காலத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பிடிஆர் இதில் விளக்கினார். மேலும், இதில் பங்கேற்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அமைச்சர் பிடிஆர் விரிவாகப் பதில் அளித்தார்.
அட்வைஸ்
அப்படித்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு என்ன அட்வைஸ் தர விரும்புகிறீர்கள் என ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு விரிவாகப் பதில் அளித்த அமைச்சர் பிடிஆர், "மத்திய நிதியமைச்சர் ஒரு தமிழர். மதுரையில் பிறந்து வளர்ந்தவர். தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது, அவர் எப்போதும் அன்புடன் பழகக் கூடியவர். தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
10 மடங்கு கஷ்டம்
அவரது வேலை வேறு என்னுடைய வேலை வேறு. எனது வேலையைக் காட்டிலும் அவரது பணி 10 மடங்கு கடுமையானது. ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவருடன் நேரடியாக ஆலோசித்து உள்ளேன். அதில் அவரது செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளது. நானும் அவரும் மதுரையைச் சேர்ந்தவர் தான். மதுரையில் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளார். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
மக்களைச் சந்திக்கவில்லை
எனது ஒரே பிரச்சினை என்னவென்றால், அவர் மக்களைச் சந்தித்துத் தேர்தல் மூலம் இந்த பதவிக்கு வந்தவர் இல்லை. இதனால் சில நேரங்களில் நாடாளுமன்றத்தில் மிகவும் ஆவேசமான பதில்களை அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அங்கு வில்லன் அவர் இல்லை. அவருக்குப் பலரும் அங்கு வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறார்கள். அவரிடம் உடைந்துபோன ஒரு அமைப்பு தான் கொடுத்துள்ளனர்.
அட்வைஸ் இதுதான்
சில நேரங்களில் தேவையில்லாமல் அவர் குறிவைக்கப்படுவார். சில நேரங்களில் என்னைப் போலவே தவறான இடங்களில் இருந்துவிடுவார். நானும் அதே சூழலில் தான் உள்ளேன். எனவே, அவருக்கு நான் என்ன அட்வைஸ் செய்வது. அவர் மீது இருக்கும் மதிப்பில் மரியாதையில் சொல்கிறேன். அவர் மக்களுடன் அதிகம் உரையாடத் தொடங்கினால் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்" என்றார்.
வளர்ச்சியைத் தடுக்க முடியாது
இந்த ட்விட்டர் ஸ்பேஸில் அவர் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் அளித்தார். மாநிலத்தின் வளர்ச்சியை மத்திய அரசால் தடுக்க முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "நாம் செய்யும் பணிகளைச் செய்தால் வரும் முதலீடுகளை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாகச் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்தால் மட்டுமே அது சாத்தியம். மற்றபடி நாம் செய்யும் வேலைகளைச் சிறப்பாகச் செய்தால் மாநிலம் வளர்ச்சி அடையும்" என்றார்.