“எடப்பாடி பழனிசாமி வேண்டுமானால் அடிமையாக கிடைக்கலாம்..” போகிற போக்கில் சாடிய அமைச்சர் ரகுபதி
சென்னை: திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு பக்கத்தில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த கோரும் பாஜக, இந்துத்துவா அமைப்புகளுக்கும் இடையே பஞ்சாயத்துகள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனத்தை அடுக்கியுள்ளார்.
அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு அடிமையாக பழனிசாமி வேண்டுமானால் கிடைப்பார். மற்றபடி வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் இவற்றுக்கு எடுத்துக்காட்டான பூமி இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். அதை இன்றைக்கும் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.

பழனிச்சாமிக்கு வேற வேலையே கிடையாது. தமிழ்நாடு அரசு மீது ஏதாவது குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய வேலை. இந்த சம்பவத்தையும் அவர் எடுத்துக்கொண்டு, இதிலே தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர், இந்துத்துவாவுக்கு அடிமையாக இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலமாக நிரூபித்திருக்கிறார்.
கடந்த 2014ம் ஆண்டு.. அதிமுகவினர் அம்மா அம்மா என்று போற்றிக் கொண்டிருக்கிறார்களே.. அப்பேர்பட்ட அம்மையார் காலத்தில் வந்த தீர்ப்புதான் இது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த தீர்ப்பு வந்திருப்பதால், ஜெயலலிதா அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியதை தான் நாங்கள் கூறுகிறோம்.
அன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வைத்த வாதம் இதுதான். அதாவது, இன்று திருப்பரங்குன்றத்தில் எங்கு தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறதோ, அதே இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அரசு தரப்பிலும் நீதிமன்றத்தில் இதே வாதத்தைதான் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்று இதை எதிர்ப்பதன் மூலம், தான் முழு அடிமை என்பதை, அடிமை சாசனமாக எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்திருக்கிறார். இதற்காக அதிமுக தொண்டர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications