“கால்கள், கார்கள் மாறுவதை வழக்கமாக வைத்துள்ள பழனிசாமிக்கு ரோசம் மட்டும் வருது” - அமைச்சர் ரகுபதி
சென்னை: விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரொட்டில் நடைபெற்ற அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அதற்கு பதில் கொடுத்திருந்தார். "எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?" எனக் கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!
நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்? அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க் காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?
நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன? விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!
பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது. 'மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!' எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?
கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும். டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி.
கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் 'குப்' என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications