அண்ணாமலையா?.. அவர் யாரு?.. நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும்.. பிரஸ் மீட்டில் அமைச்சர் கிண்டல்
சென்னை: அண்ணாமலையா யார் அவர்? நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் என பால்வளத் துறை அமைச்சர் நாசர் கிண்டல் செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பருத்திப்பட்டு கிராமத்தில் 350 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆவடி சட்டசபை உறுப்பினரும் பால்வளத் துறை அமைச்சருமான நாசர் வழங்கினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த வகையில் ஆவடி சுற்று வட்டார பகுதியில் பட்டா வேண்டி பலர் மனு அளித்திருந்தனர்.
400 குடும்பங்கள்
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 200 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பட்டாக்களை பெற்று கொண்ட பயனாளிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இதையடுத்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சார்பட்டா பரம்பரை படத்தில் அதிமுகவை திரித்து கூறியிருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார். அவர் ஒரு ரோட்டோர அமைச்சராக இருந்தவர்.
கொள்கை தெரியாது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறு தெரியாது. கொள்கை அடிப்படையில் அவர் அதிமுகவுக்கு வரவில்லை. திமுக நீண்ட வரலாறு கொண்டது. அவர்களுக்கு வரலாறு தெரியும் என்றார் நாசர்.
பாஜக தலைவர்
மேலும் தமிழகத்தில் 3 முதல்வர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அண்ணாமலை யார் என கேள்வி எழுப்பினார். அவருக்கு திமுக குறித்தும் அதன் வரலாறு குறித்தும் தெரியாது. அவர் அப்படித்தான் கூறுவார் என்றார் நாசர்.