"ரொம்ப தப்பு!" வாய்க்கொழுப்பு என திட்டிய செல்லூர் ராஜூ! சேகர்பாபுவுக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி
சென்னை: திமுக அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து உள்ளார்.
பருவ மழை வெகு விரைவில் தொடங்க உள்ள நிலையில், தலைநகர் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வடிகால் பணிகள் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த முறை மழை நீர் தேங்காது என்று நம்புவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
ஆலோசனை
இதற்கிடையே வடசென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் 5 பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இப்போது சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சர் சேகர்பாபு
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இப்போது இருக்கும் தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி, இவ்வளவு பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைவாகச் செய்வது இதுவே முதல்முறையாகும். மொத்தம் 1200 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.
செல்லூர் ராஜூ
முன்னதாக திமுக அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பயணத்தை ஓசி பயணம் எனக் கூறி இருந்தது சர்ச்சையானது. இதை விமர்சித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக வாய்க் கொழுப்பு அதிகரித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடியிருந்தார்.. இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, "எதற்காக அவர் (செல்லூர் ராஜூ) இப்படிப் பேசி வருகிறார் என தெரியவில்லை.
ரொம்ப தப்பு
எந்த அடிப்படையில் அவர் இப்படிப் பேசி வருகிறார். அமைச்சரே இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துவிட்டார்கள். அதன் பின்னரும் இது தொடர்பாகப் பேசுவது சரியாக இருக்காது. அதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தான் சிறப்பாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
கேள்வி தவிர்த்த அமைச்சர்
அதைத் தொடர்ந்து மனுஸ்மிருதி குறித்து திமுக எம்பி ராஜா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அதைத் தவிர்க்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் குறித்தே பேசினார். மேலும், மாநகராட்சி தெரு பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணிகள் நிறைவு
அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்துப் பேசிய மேயர் பிரியா ராஜன், ஏற்கனவே 95%சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளுக்கான வரைவு சென்னை ஐஐடியிடம் ஆய்வின் படி நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.