கருணாநிதி 100! 10 நிமிடத்துக்கு மேல் பேச வேண்டாம்! கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு சேகர்பாபு டைம்!
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை 10 நிமிடத்துக்கு மேல் பேச வேண்டாம் அமைச்சர் சேகர்பாபு சொன்னது மேடையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
குறிப்பாக கே.எஸ்.அழகிரி, வேல்முருகன் போன்றோர் அமைச்சர் சேகர்பாபுவின் இந்த 10 நிமிடம் அவகாசம் பேச்சை ரசிக்கவில்லை. திருமாவளவன் பேசி முடித்த பிறகு முத்தரசன் பேச வந்த போது சேகர்பாபு இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து வந்து மேடையில் அமர வைத்து 10 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் எனச் சொல்லியது தேவையற்ற நிகழ்வாக கருதப்படுகிறது.
சென்னை பின்னி மில் மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழாவில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொகைதீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, கி.வீரமணி, கே.எஸ்.,அழகிரி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள், வேல்முருகன் போன்றோர் எல்லாம் ஏற்கனவே கூட்டணிக் கட்சியின் ஆட்சி மீது பல்வேறு விவகாரங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்களை சீண்டிப்பார்க்கும் வகையில் 10 நிமிடங்களுக்கு மேல் பேசக் கூடாது என அமைச்சர் கூறியது கூட்டணியில் தான் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொகுதிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை அடிக்கடி அழைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களை கவுரவிக்கக் கூடியவர் அமைச்சர் சேகர்பாபு என்றும், சென்னையில் சட்டென்று மாறிய வானிலை காரணமாகவும் மழை வந்துவிடுமோ என்ற ஐயத்தாலும் தான் அமைச்சர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை விரைந்து பேசச் சொன்னார் என காரணம் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications