"1991-ல் அவர் சொத்து என்ன தெரியுமா!" பழைய வரலாற்றை கிளறிய சேகர்பாபு! ஜெயக்குமாருக்கு ஓபன் சேலஞ்ச்
சென்னை: சாத்தாங்காடு இரும்பு சந்தை ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். கொரோனா குறித்து அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை பணிகளை விளக்கிய அவர், அதிமுகவின் ஜெயக்குமார் எழுப்பிய கேள்விக்கும் பதிலடி கொடுத்தார்.
சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள இரும்பு (ஸ்டீல் யாட்) பகுதியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உடன் இருந்தனர்.
அதன் பிறகு அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சேகர்பாபு, கொரோனா பரவல் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "விரைவில் அமைய உள்ள இந்த"ஸ்டீல் மார்கெட்டால் எந்த வித பாதிப்பும் இல்லை.. சுற்றுப்புறப் பகுதி மக்களின் வாழ்வின் மேம்பாட்டுக்களை செய்ய 131 மனைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் 184 மனைகளைப் பதிவு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. இந்த வளாகத்திற்குள்ளேயே பெருநகர திட்டத்தின் கீழ் மருத்துவமனை அமைக்கப்படும்..

சென்னை
அதிக வாகனங்கள் வருவதால் ஒர்க் ஷாப் மற்றும் நவீன எடைமேடை அமைத்துத் தரவும் ஒப்புதல் அளித்துள்ளோம்.. நிரந்தரமாக உள்ளேயே ஒரு உணவகம் ஏற்படுத்தித் தரப்படும். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சாத்தாங்காடு பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமையவும் ஆய்வு நடத்த உள்ளோம். தொழில் செய்வோருக்கும் தொழில் முனைவோருக்கும் பெரிய நகரமாக இது இருக்கும். சென்னை மாஸ்டர் பிளான் பணி பல பணிகள் நிறைவேற்றப்பட இருக்கிறது.. மூன்றாவது திட்டப் பணி 2026 ஆம் ஆண்டு தான் நடக்கும்.

கொரோனா பாதிப்பு
இப்போது முதல்வர் நமக்குத் திராவிட மாடல் ஆட்சியைத் தந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமான ஆட்சி ஆகும்.. எந்த முறையில் இருந்து கொரோனா வந்தாலும் அதைத் தடுக்கின்ற நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு நிச்சயம் எடுக்கும். எனவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.. வரும் முன் காப்போம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

வாட்ச் விவகாரம்
மேலும் முதல்வரின் கைக்கடிகாரம் பற்றி ஜெயக்குமார் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "ஜெயக்குமார் தனது சொத்து விவரத்தையும் தனது பினாமி சொத்தையும் கூறினால் நன்றாக இருக்கும்.. முதலில் ஜெயக்குமார் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளட்டும்.. அLன் பிறகு மற்றவர்களைப் பார்த்து வெளிப்படைத் தன்மையுடன் இருங்கள் என்று சொல்லலாம்.

சொத்து விவகாரம்
ஜெயக்குமார் தனது இருப்பிடத்தைக் காட்டிக்கொள்ளவே இப்படிப் பேசி வருகிறார். இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. 1991ஆல் ஜெயக்குமார் சம்பாதித்த சொத்து எவ்வளவு என அவரால் கூற முடியுமா? இப்போது அவருக்கும் அவரது பினாமி பெயர்களிலும் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதைத் துணிச்சலாக அவரால் வெளியிட முடியுமா" என்றும் அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

ஜெயக்குமார்
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அண்ணாமலை தனது வாட்ச் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். அவரது வாட்சின் விலை ரூ.5 லட்சம் என்றும் அதற்கான ஆதாரத்தைத் தருகிறேன் என்றும் அவர் கூறிவிட்டார். எனது வாட்ச் ரூ.10 ஆயிரம் தான். அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை வாட்ச் விலை எவ்வளவு எனக் கூற முடியுமா? அவர்கள் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மதிப்பிலான வாட்சை அணிகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications