100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது... அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால்..!
சென்னை: 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஸ்தம்பிக்க வைக்க முடியாது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக அரசை வழிநடத்தக் கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றோ, நேற்றோ அரசியலுக்கு வந்தவர் அல்ல என்றும் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் மிக்கவர் எனவும் அவர் கூறினார்.
நியாயமாக பார்த்தால் மத்திய அரசை எதிர்த்து தான் பாஜக போராடியிருக்க வேண்டும் என்றும், அதை விடுத்து தமிழக அரசை எதிர்த்து அந்தக் கட்சியினர் போராட்டம் நடத்துவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.

கோயில் திறப்பு
தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, திமுகவின் சித்தாத்தங்களை மக்களிடம் புகுத்த நினைக்கக் கூடாது என்றும் இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களை வார நாட்களில் மூடுவதா எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

100 பாஜக
மேலும், பாஜக முன்னெடுக்கும் போராட்டங்கள் மூலம் தமிழக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 100 பாஜக வந்தாலும் திமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறினார். மத்திய அரசின் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளின் படி தான் தமிழகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், பாஜக போராட வேண்டும் என விரும்பினால் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தான் போராட வேண்டுமே தவிர தமிழக அரசை எதிர்த்து அல்ல எனக் கூறியிருந்தார்.

உள்நோக்கம் இல்லை
கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்பது மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என்றும் மற்றபடி வாரநாட்களில் கோயில்கள் மூடப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். இதனிடையே வெள்ளி, சனி, ஞயிற்றுக்கிழமைகளில் கோயில் மூடப்படுவதால் நான்காவது நாளான திங்கட்கிழமை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் இனி வரும் வாரங்களில் வெள்ளிக்கிழமையும் கோயில் திறக்கப்பட்டு சனி மற்றும் ஞயிற்றுக்கிழமை மட்டும் மூடப்படவும் வாய்ப்பிருக்கிறது.

கோயில் திறப்பு
பக்தர்களிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு வரும் கடிதங்கள், பாஜக போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கவனத்தில் கொண்டுள்ள அரசு வார நாட்களில் கோயில் திறப்பு விவகாரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது.












Click it and Unblock the Notifications