தஞ்சை தேர் திருவிழாவில் மின்சார விபத்து! இனி புதைவட கம்பிகளாக மாற்றப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தஞ்சையில் களிமேட்டில் 94 ஆவது அப்பர் குருபூஜை விழா நேற்று முன் தினம் இரவு தொடங்கியது. 3 நாட்கள் நடத்தப்படும் விழாவில் முதல் நாளான தேரோட்டம் அன்றைய தினம் இரவு 12 மணிக்கு தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏராளமான மின் விளக்குகள் இருந்தன. இந்த நிலையில் தேர் களிமேட்டில் உள்ள அனைத்து வீதிகளிலும் சென்றது. மக்கள் தேங்காய், பூ, பழம் வைத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

தேரை திருப்பும் போது விபத்து
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த தேரை திருப்பும் போது அது பளு தாளாமல் பின்னோக்கி இழுத்தது. அப்போது மேலே இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்தவர்கள், தேர் இருந்த வாகனத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் என 11 பேர் தீயில் கருகி பலியாகினர்.

15 பேர் காயம்
மேலு்ம 15 பேர் படுகாயமடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டிற்கு சென்று அங்கு இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி நிதியையும் அவர்களது குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு
இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் நேற்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், தஞ்சாவூர் களிமேட்டில் நடந்தது தேர் திருவிழா அல்ல, அது சப்பர திருவிழா, அது தேர் அல்ல, சப்பரம். மக்கள் அரசின் அனுமதியில்லாமல் அந்த விழாவை நடத்தியுள்ளனர் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
இந்த தஞ்சை களிமேடு மின்சார விபத்து விவகாரம் இன்றும் சட்டசபையில் எதிரொலித்தது. இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில் தேரோடும் வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இனி தேரோட்ட வீதிகளில் உள்ள மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications