மின் துறை அதிகாரிகள் வயிற்றில் புளியைக் கரைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. சட்டசபையிலேயே எச்சரிக்கை!
சென்னை: மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான விவாதம் 4வது நாளாக நடைபெறுகிறது. இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் இன்று அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன், மின் மாற்றி பழுது ஏற்பட்டால் அதனை மாற்றித் தர விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
"வானூர் தொகுதியில் பேரிடர்களின் போது புயலால் மின் கம்பங்கள் சாய்ந்து பாதிப்படைவதால் மேல்நிலை கம்பி புதைவட கம்பிகளாக மாற்றப்படுமா?" என்று சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி எம்.எல்.ஏ சக்ரபாணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி என தேவைப்படும் இடங்களில் புதைவட கம்பிகள் பதிக்கப்படும். வானுர் தொகுதியிலும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications