இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கணும்! வங்கிகள் கடன் வழங்கணும்! -அமைச்சர் தாமோ அன்பரசன்
சென்னை: மாணவர்களை, இளைஞர்களை புத்தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் அனைத்து திட்டங்களையும் ஒருமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் FaMe-TN, தாய்கோ வங்கி, சேகோசர்வ், இண்ட்கோசர்வ் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தனித்தனியே அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் 152 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் மானியம் வழங்கப்பட்டது என்றும் மானியம் வழங்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை, வர்த்தக ரீதியாக தயாரித்து, சந்தைப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்பாளர்களை புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை TN-Start-up நிறுவனம் மற்றும் சுய தொழில் திட்டங்கள் வாயிலாக நிதியுதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்க புதியதாக தொடங்கப்பட்ட FaMe-TN நிறுவனம் கடந்த நிதியாண்டில் 47 வங்கிகள் மூலம் 13,500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.200 கோடி கடன் உத்திரவாதத்துடன் ரூ.1,930 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில், அதிக அளவிலான தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட தாய்கோ வங்கி, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நடப்பாண்டு 3,500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, அந்த இலக்கினை எய்திட வங்கியின் வாராக் கடன்களை விரைந்து வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications