Get Ready Force! வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை! தயார் நிலையில் மின்வாரியம்! அமைச்சர் சொன்ன ஐடியா
சென்னை: வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.
அதில் பருவ மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.

மேலும், அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் இதற்கென தனியாக குழு அமைத்து கன மழையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டறிந்தார். மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மின்சார சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறும், பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை அளித்து பாதுகாப்பான முறையில் மின்கட்டமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபடுமாறும், மின்சார சீரமைப்பு பணிகளுக்கு தேவையான JCB வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications