15,610 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு கேபினட் ஒப்புதல்.. ‘செம’ அப்டேட் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை : தமிழ்நாட்டில், ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், இந்த திட்டங்கள் மூலம் 8,776 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தில் நிறைய முதலீடுகள் வந்துள்ளதாகவும், மேலும் பல முதலீடுகள் தென் தமிழகத்திற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாங்கள் போகும் பாதையில் ஒளிவெள்ளமாகத் தெரிகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
சவுத்துக்கு 'செம’ திட்டம்! விண்வெளி தொழில் பூங்கா அமைக்க இஸ்ரோவுடன் ஆலோசனை.. தங்கம் தென்னரசு தகவல்!
அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 9-ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் அறிவிக்க உள்ள துறை சார்ந்த திட்டங்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
15,610.43 கோடி முதலீடு
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்துறையில் புதிதாக பெறப்பட்டிருக்கும் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 15,610.43 கோடி புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் 8,776 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். 8 புதிய திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தென் தமிழகத்திற்கு
மேலும், "மின்னணு வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் டெக்னாலஜி, ஆக்ஸிஜன் தொழிற்சாலை உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் பரவலான முறையில் அமையக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது. மின்னணுக் கொள்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் நிறைய முதலீடுகள் வந்துள்ளது. மேலும் பல முதலீடுகள் தென் தமிழகத்திற்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்றும் தெரிவித்தார்.
பரந்தூர் ஏர்போர்ட் பகுதியில்
தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "பரந்தூர் விமான நிலையத்தையொட்டி ஏற்கனவே பல தொழிற்பூங்காக்கள் உள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பான முன் ஏல சந்திப்பில், அந்த பகுதி மக்களின் கருத்துகள் தொடர்பாக தொழில்நுட்பம் சார்ந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வருகின்றன. 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செல்லும் பாதையில் ஒளிவெள்ளம்
தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள உள்ளோம். அதில் தமிழ்நாட்டின் இருப்பை பதிவு செய்வது முக்கியமானது. தமிழ்நாட்டுடன், மற்ற மாநிலங்களும் வருகிறார்கள். இதனால் நாங்கள் போகும் பாதையில் ஒளிவெள்ளமாகத் தெரிகிறது" எனப் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.