தமிழகத்தின் 3-வது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- 2019 முதல் இன்று வரையிலான அரசியல் பயணம்!
சென்னை: தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பதவியேற்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர்கள் பொன்முடி,கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் பொன்முடி உயர் கல்வித் துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கயல்வி செல்வராஜ், ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கூடுதலாக சுற்றுச் சூழல் இலாகா கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய முகங்களாக கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதலாக
திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்கள் நாளை மாலை 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதன் முதலாக 2009-ம் ஆண்டு துணை முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அப்போது முதல்வராக கருணாநிதி பதவியில் இருந்தார், 2009-ம் ஆண்டு மே 29-ந் தேதி முதல் 2011-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தார்.
தமிழ்நாட்டில் 2-வது துணை முதல்வரானவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தார். 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு மே 6-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி வகித்தார்.
தற்போது 3-வது துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை கருணாநிதி முதல்வராக, துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தனர். அதேபோல தந்தை மு.க.ஸ்டாலின் முதல்வராக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
2012-ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின். 2018,2019-ல் திமுகவின் கிராம சபை உள்ளிட்ட கூட்டங்களில் பங்கேற்றார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. அதே 2019-ம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் திராவிடர் இயக்க கொள்கைகள் விளக்க பாசறைக் கூட்டங்களை நடத்தினார். 2021 சட்டசபை தேர்தலில் சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அப்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் தரப்படவில்லை.
2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதிதான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications