சனி, ஞாயிறு என்றால் தாய்மாமா எங்க வீட்டுக்கு வந்துடுவாரு! உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த ருசிகரத் தகவல்!
சென்னை: தனது மாமா ராஜமூர்த்தியும் தானும் ரூம் மேட்ஸ் என்றும் அவர் சென்னையில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்தபோது சனி, ஞாயிறு என்றால் தங்கள் வீட்டுக்கு அவர் வந்துவிடுவார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் தனது மாமாவோடு சேர்ந்து சேட்டை செய்த கதையையும் பகிர்ந்த அவர் அதில் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது என திருமண விழாவில் பகிர்ந்துகொண்டார்.
துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தி மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது தாய்மாமாவுக்கும் தனக்கும் உள்ள பந்தத்தை பற்றி மிகவும் உரிமையோடு பேசினார். மாமாவை பற்றி தாம் பேசவில்லை என்றால் அவர் கோபித்துக் கொள்வார் என்றும் அதனாலேயே அவரை பற்றி பேசுவதாகவும் கூறி கலாய்த்தார்.

கோபாலபுரம் இல்லத்தில் தாங்கள் குடியிருந்த போது, சென்னையில் தங்கி தனது மாமா ராஜமூர்த்தி எம்.பி.பி.எஸ். படித்து வந்ததாகவும் அப்போது சனி, ஞாயிறு என்றால் தங்கள் வீட்டுக்கு அவர் வந்துவிடுவார் எனவும் கூறினார். அப்படி வரும் போது தன்னுடைய அறையில் தான் ராஜமூர்த்தி தங்குவார் என்றும் அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் மாமாவும் நானும் சேர்ந்து நிறைய சேட்டைகள் செய்திருப்பதாக பழைய நினைவலைகளில் மூழ்கினார்.
தன்னை தனது சித்தி தூக்கி வளர்த்தாலும் தனது மாமாவும் தானும் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தனது அப்பா அம்மா, சித்திகளுக்கு அடுத்தபடியாக தனது வளர்ச்சியில் தனி அக்கறை செலுத்தக் கூடியவர் ராஜமூர்த்தி மாமா என உருகினார். இதையெல்லாம் சொல்ல வேண்டிய கடமை தனக்கிருப்பதாக தனது மாமாவுடனான பழைய நாட்களை பகிர்ந்துகொண்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொன்றாக பழைய கதைகளை கூறியதும் அதைக்கேட்டு அவரது உறவினர்களும், அவரது தாய்மாமா ராஜமூர்த்தியும் மேடையில் விழுந்து விழுந்து சிரித்தனர்.












Click it and Unblock the Notifications