சென்னை கடலில் கிடந்த ஏவுகணை.. கடலுக்கு போன காசிமேடு மீனவர்களுக்கு அதிர்ச்சி.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கடலில் மீன்பிடித்த மீனவர்கள் வலையில் இன்ஜின் இன்றி ஏவுகணை சிக்கியது. இந்த ஏவுகணையை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடற்கரையையொட்டி ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. குறிப்பாக காசிமேட்டில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீன்பிடிப்பதை முக்கிய தொழிலாக வைத்துள்ளனர்.

அதேபோல் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் மீன்பிடி படகு வைத்துள்ளார். இவர் சக மீனவர்களுடன் சேர்ந்து கடலில் சென்று மீன்பிடித்து கரைக்கு திரும்புவது வழக்கம்.
அந்த வகையில் தினேஷ் குமாரின் மீன்பிடி படகில் வெங்கட்ராமன் உள்பட மேலும் சில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கடலில் அவர்கள் மீன்களை பிடிக்க வலை விரித்தனர். அதன்பிறகு மீன்பிடி வலையை மீனவர்கள் கடலில் இருந்து எடுத்தனர்.
அப்போது மீன் வலை வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் காணப்பட்டது. இழுப்பதற்கு மீனவர்கள் சிரமப்பட்டனர். இருப்பினும் மீனவர்கள் விடவில்லை. பெரிய பருமன் கொண்ட மீன் சிக்கியிருக்கலாம் என நினைத்து மீனவர்கள் கஷ்டப்பட்டு வலையை இழுத்தனர். அப்போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வலையில் மீனுக்கு பதில் ஏவுகணை சிக்கியிருந்தது. இன்ஜின் இன்றி அந்த ஏவுகணை காட்சியளித்தது. இதையடுத்து உடனடியாக மீனவர்கள் கரை திரும்பினர். சம்பவம் குறித்து காசிமேடு மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏவுகணையை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையின் அந்த ஏவுகணை யாருக்கு சொந்தமானது? கடலில் எப்படி விழுந்தது? என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‛‛பாதுகாப்பு படையினர் ஆயுத சோதனைகள் நடத்தியிருக்கலாம். அப்போது அந்த ஏவுகணை கடலில் விழுந்து தற்போது மீனவர்கள் வலையில் சிக்கியிருக்கலாம். இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.












Click it and Unblock the Notifications