அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரியின் சம்மதத்துடனேயே இது நடக்கவிருக்கிறது. கயல்விழி, இணைவதன் மூலம் ஸ்டாலின் குடும்பத்துக்கு செக் வைக்க விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும், திமுகவில் இணைய மு.க.அழகிரி எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அழகிரியை திமுகவில் இணைத்துக் கொள்வதில் ஸ்டாலினுக்கு தயக்கம் இருந்தபடியே இருந்தது. குறிப்பாக, ஸ்டாலினின் குடும்பத்தினர் அழகிரிக்கு எதிராக செயல்பட்டனர். இதனால், குடும்பத்தினரை மீறி ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும், திமுகவுக்கு எதிராகவோ, ஸ்டாலினுக்கு எதிராகவோ எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் அழகிரி ஈடுபடவில்லை.

அமைதியாகவே இருந்து வந்தார். அவரது ஆதராவளர்கள் பலரும், தனிக் கட்சி துவங்கச் சொல்லி வலியுறுத்திய போதும் அதனை மறுத்தார். அதேபோல, பாஜக தலைமை, தங்கள் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள், பாஜகவின் மாநில தலைவராக்குகிறோம்; மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் என்று சொன்ன போது கூட அதனை ஏற்க மறுத்தார் அழகிரி.
2021-ல் ஆட்சியை பிடித்து முதல்வரானார் ஸ்டாலின். அவருக்கு வாழ்த்துச் சொன்னார். அமைதியாகவே இருந்தார். அழகிரியின் மகன் துரை, உடல்நலம் குன்றியிருந்ததால் அவரை பாதுகாப்பதில் அழகிரியின் கவனம் சென்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் அதற்கு பிறகும், திமுகவில் அழகிரியை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சு வந்தபோதும் கூட அழகிரிக்கு எதிராகவே முடிவு எடுத்தது ஸ்டாலின் குடும்பம். இதனை அறிந்து பாஜக தரப்பிலிருந்து மீண்டும் அழகிரிக்கு தூது விட்ட போதும், ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், 2026 தேர்தல் நெருங்கி வந்த நிலையில், அழகிரி மகள் கயல்விழியை திமுகவில் இணைக்கலாம்; அழகிரி அண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மாதிரி இருக்கும் என்று ஸ்டாலினிடம் கனிமொழி சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால், அதில் அக்கறைக் காட்டவில்லை ஸ்டாலின். இதனைக் கேள்விப்பட்ட அழகிரி, ''எனக்காக அவரிடம் (ஸ்டாலின்) சிபாரிசுக்கு போகாதம்மா...அது உனது சுயமரியாதைக்கு அழகு அல்ல'' என்று அட்வைஸ் செய்தார். இதனால், குடும்பம் ரீதியாக ஸ்டாலினிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார் கனிமொழி.
இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் சமயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கயல்விழி பேசத் தொடங்கினார். விஜய் ஆதரவு மனநிலை அதிகம் வெளிப்பட்டது. அப்போது, அழகிரியிடமும், கயல்விழியிடமும் விஜய் பேசியதாகவும் கூட ஒரு தகவல் உண்டு.
இந்த நிலையில், முதல்வர் ஆனார் விஜய். அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட கயல்விழி, ''மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர்' என்று தொடங்கி விஜய்க்கு ஆதரவாக பல கருத்துக்களை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், முதல்வரை சந்திக்க சமீபத்தில் கோட்டைக்கு வந்த அவர், விஜய்யை சந்திக்க முடியவில்லை. அரசு அதிகாரிகளிடமும், சில அமைச்சர்களையும் பார்த்து விட்டு திரும்பினார். கயல்விழி வருகை குறித்து முதல்வர் விஜய்யிடம் சொல்லியுள்ளனர். அன்று இரவு அழகிரியிடம் பேசிய விஜய், ''அண்ணே, நான் இல்லாத போது கயல் வந்துள்ளார். நான் சொல்கிறேன். அப்போது கயல் வரட்டும்'' என்று சொன்னதாக தவெக தரப்பில் சொல்லப்படுகிறது.
அன்பில் மகேஸை களமிறக்க உதயநிதி திட்டம்
சந்தித்து முறைப்படி தவெகவில் கயல்விழி இணையும் பட்சத்தில், திருச்சி கிழக்கில் அவரை களமிறக்கலாம் எனும் யோசனை விஜய்யின் ஆலோசகர்களிடம் இருக்கிறது. ஏனெனில், திருச்சி கிழக்கில் உதயநிதியின் நெருங்கிய நண்பரும் தேர்தலில் தோற்றுப் போனவருமான அன்பில் மகேஸை களமிறக்க உதயநிதி திட்டமிட்டுள்ளாராம். உதய்யின் நண்பரை தோற்கடிக்க, திமுக குடும்பத்திலிருந்தே ஒருவரை நிறுத்துகிறேன் என திமுகவுக்கு செக் வைக்கவே இந்த யோசனை'' என்று சொல்கின்றனர்.
இந்த சீக்ரெட் அரசியல் திமுகவிலும் பரவியுள்ளது. ஒருவேளை கயல்விழி களத்தில் இறக்கப்பட்டால் அவருக்கு போட்டியாக கனிமொழியை ஸ்டாலின் இறக்குவார் என்கின்றனர் திமுகவினர். ஆனால், இதற்கு கனிமொழி ஒப்புக் கொள்ள வேண்டுமே? ஏன்னா, அண்ணன் அழகிரியின் மகளை எதிர்த்துப் போட்டியிட நிச்சயம் கனிமொழி சம்மதிக்க மாட்டார்'' என்றும் கனிமொழி ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications