"உதயநிதியைவிட குறைந்துபோய்விட்டாரா என்ன அழகிரி?".. திமுகவினர் மனதில் வட்டமடிக்கும் கேள்விகள்!
Recommended Video

சென்னை: கருணாநிதி மறைவுக்கு பிறகு முக ஸ்டாலின் எடுத்த அதிரடிகள் கூட்டணி சமயத்தில் காணாமல் போனதுதான் மிச்சம்!
வழக்கமாகவே அதிமுகவின் வாக்கு சதவீதத்தைவிட சற்று குறைவாக இருப்பதுதான் திமுக! இதுதான் கடந்த கால வரலாறும். எம்ஜிஆர் மேல் யாருக்குமே வெறுப்பு வராததால்தான் அவர் உயிரோடு இருக்கும்வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
ஊழல் புரிந்ததால் ஜெயலலிதா மீதான கோபம் மக்களுக்கு எப்போதெல்லாம் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் திமுக ஆட்சியை பிடிக்க நேர்ந்தது. எனவே ஒரு தலைமையின் மீதான அதிருப்தி ஏற்படும்போதுதான் மாற்றாக அடுத்த கட்சியை மக்கள் நினைக்கிறார்கள்.

சோபிக்க முடியாது
இப்போதைக்கு அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் அமையப் போகிறது என்பதற்காக இங்கே 10 சீட்டுக்களை அலேக்காக எடுத்து கொடுத்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் 10-இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுமா? இருக்கும் கோஷ்டி பூசல்களில் யாருக்கென்று சீட் பிரித்து தந்து யாருக்கென்று அந்த கட்சி பார்க்கும்? மீதமுள்ளவை எல்லாமே 2, 2 சீட்டுகளை உடைய கூட்டணி கட்சிகள்தான். இதில் பெரிதாக திமுகவால் சோபிக்க முடியாது.

வட மாவட்டங்கள்
திமுகவிடம் உள்ளதோ வெறும் 20தான். பாமக, தேமுதிக என இரண்டையுமே திமுக உள்ளே கொண்டுவராமல் விட்டுவிட்டது. இதனால் வடமாவட்டங்களில் திமுகவுக்கு சாத்தியக்கூறுகள் குறைவுதான். வட மாவட்டங்களைதான் ஸ்டாலின் இழந்துவிட்டார், தென் மாவட்டங்களையாவது வலுப்படுத்த அதிரடிகளை எடுப்பது அவசியமாகிறது. இதற்கு பேசாமல் அழகிரியை உள்ளே இழுத்து போட்டால், திமுகவின் வெற்றிக்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.

தென் மாவட்டங்கள்
அன்று திருமங்கலத்தில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தபோது அதை நடத்தி முடித்தவர் அழகிரி. அழகிரிக்கென்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அவருக்கு உண்மையான தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற சமயத்தில் அழகிரி கூடவே இருந்தால் தென்மாவட்டங்களை ஈஸியாக கவனித்து கொள்வார். காரணம் வியூகம் வகுப்பதிலும், பேசுவதை விட செயலில் காட்டுவதிலும் ஸ்டாலினை விட ஒரு படி மேலே அழகிரி.

அன்பே போதும்
2 சதவீத ஓட்டுக்களை உடைய தேமுதிக பின்னால் கடைசிவரை ஏன் வீடுவரை சென்ற திமுகவால், ஏன் சொந்த கட்சியில் உள்ள சொந்த சகோதரரை பற்றி யோசிக்க கூடாது என்று திமுகவின் தீவிர ஆதரவாளர்களே கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதி இறந்த பிறகு, கூட்டணியில் சேர்க்காத கோபத்தால் அழகிரி ஒன்றும் தனிக்கட்சி தொடங்கவில்லை. பாஜக நேரிடையாக சென்று தன் கட்சிக்கு கூப்பிட்டு பார்த்தும், "உங்கள் அன்பே போதும்" என்று அதை நாசூக்காக வெளிப்படுத்தி மறுத்துவிட்டவர் அழகிரி.

அழகிரி சபதம்
இப்போதுள்ள திமுக தலைமையை அசிங்கப்படுத்தவும், கட்சியை சீர்குலைக்கவும் எந்தவிதமான இழிவான செயலிலும் அழகிரி ஈடுபடவில்லை. இப்போதுகூட, "தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றிபெறவிடமாட்டேன்" என்று சபதம் எடுக்கும் அளவுக்கு அவர் சென்றுள்ளதற்கு காரணம் திமுகவில் அவர் இல்லையே என்ற ஆதங்கத்தினால்தான்.

உதயநிதி ஸ்டாலின்
தென்சென்னையில் உதயநிதி ஸ்டாலினுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யப்படுவதாக செய்தி வந்தது. இதுவரை திமுகவுக்காக என்ன செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்? இப்படி அனுபவமே இல்லாத ஒருவருக்கு மகன் என்ற ஒரே ஒரு உரிமையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது திமுகவினரையே கூட முகம் சுளிக்க வைத்துள்ளது. அப்படி இருக்கும்போது அனுபவமும், பக்குவமும் நிறைந்த அழகிரியை கட்சிக்குள் கொண்டு வர தயங்குவது ஏன்? "உதயநிதியைவிட என்ன மோசமாக போய்விட்டாரா அழகிரி?" இந்த கேள்விதான் கட்சி தொண்டர்களிடையே வட்டமடிக்கிறது.












Click it and Unblock the Notifications