ஆவேசமான அழகிரி.. "என் அண்ணா.." கூல் செய்த ஸ்டாலின்.. "உள்குத்து" இல்லை.. உற்சாகத்தில் திமுக
சென்னை: அரசியல் களத்தில் அமைதியாக ஒதுங்கி இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
இத்தனைக்கும்.. கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி அதிர வைத்தவர்தான் இவர்.
அந்தக் கூட்டத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பற்றிய சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார். ஸ்டாலின் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றார்.. ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை பெற்றுக் கொடுத்தது, தான் தான், என்றும் தெரிவித்தார்.

அழகிரி ஆவேசம்
இப்படியாக உஷ்ணம் ஏற்றிக்கொண்டு சென்ற அவரது பேச்சு.. ஒருகட்டத்தில், உச்சகட்டத்திற்கு போனது. வருங்கால முதல்வர் என்று ஸ்டாலினுக்காக போஸ்டர் ஒட்டுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எப்போதும் முதல் அமைச்சராக முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறி ஆதரவாளர்களின் கரகோஷத்தை பெற்றுக்கொண்டார். அழகிரி தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டனர். அனைத்திந்திய அளவில் ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் தந்தன. ஆனால், இப்போது அழகிரி கப்சிப்.

அழகிரி சிக்னல்
அந்தக் கூட்டத்தில் அழகிரி கடைசியில் பேசும்போது.. நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் ஏற்க வேண்டும் என்று சமிக்ஞை கொடுத்தார். அப்போது குடும்ப உறவுகள் இறங்கி வந்தால்.. குறுக்கே புகுந்து கலாட்டா செய்ய மாட்டேன் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் அழகிரி என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறினர். இப்போது நிலவரம் அப்படித்தான் நடந்து உள்ளது என்கிறார்கள்.

என் அண்ணன்
அழகிரி இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி ஆவேசமாக பேசிய அடுத்த மாதம்.. அதாவது பிப்ரவரி மாதம்.. தந்தி டிவியில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேட்டி கண்டனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் பற்றியும் ஒரு வரியில் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் நெறியாளர் கேட்டுக் கொண்டார். ராகுல்காந்தி, சசிகலா, ஜெயலலிதா உள்ளிட்டோர் பற்றி எல்லாம் நெறியாளர் கேட்டபோது ஸ்டாலின் அதற்கு ஒரு வரியில் பதில் சொன்னார். அழகிரி என்று கேட்டதும் "என் அண்ணன்" என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னார் ஸ்டாலின். முரசொலி பத்திரிக்கையிலும் இந்த பேட்டி வெளியானது. அப்போதே நடந்துள்ளது அந்த மாற்றம்.

குடும்பம்
இதுபற்றி அழகிரி வட்டாரத்திலும் கேட்டபோது கூறியதாவது: தேர்தல் முடிவடைந்த பிறகு அழகிரிக்கு உரிய மரியாதை தரப்படும். அதுவரை அமைதியாக இருக்க வேண்டுமென்று சென்னையிலிருந்து அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே அண்ணன் என்று கூறி.. ஸ்டாலின் அதை உறுதியும் செய்துவிட்டார். எனவே தான் அழகிரி அமைதியாக இருந்து வருகிறார்.

தேர்தல் முடியட்டும்
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை கொம்புசீவ தமிழக பாஜகவிலுள்ள சிலர் எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியாமல் போனதற்கு குடும்ப உறவுகள் நடத்திய பேச்சுவார்த்தை முக்கிய காரணமாக இருந்துள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் அழகிரி ஆசைப்பட்டபடி அவருக்கு வருவது வந்து சேரும் என்கிறார்கள் திட்டவட்டமாக.

உற்சாகம்
அழகிரி மவுனம் காத்து வருவது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் கூட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் வேலையை ஆரம்பித்து உள்ளனர். எனவே தென்மண்டலத்தில் அழகிரியால் திமுக வாக்கு வங்கிக்கு பிரச்சனை வராது என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால்.. அஞ்சாநெஞ்சன் என்று ஆதரவாளர்களால் புகழ்பெற்ற அழகிரி.. எப்போது என்ன முடிவெடுப்பார் என்று கணிக்க முடியாத ஒரு தலைவர். எனவே வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்பு வரை.. ஒரு எச்சரிக்கை கலந்த திக்.. திக் உணர்வுடன்தான் திமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications