தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு மு.க. அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி
சென்னை: திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரது தாயார் மறைந்த ராஜாமணி அம்மாள் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன். தங்கபாண்டியனின் மனைவியும் திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரது தாயாருமான ராஜாமணி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விருதுநகர் அருகே அவர்களது சொந்த ஊரான மல்லாங்கிணறில் ராஜாமணி அம்மாள் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சரும் தென் தமிழகத்தின் கழகக் காவலருமான மறைந்த தங்கபாண்டியன் அவர்களின் மனைவியும், அண்ணன் @TThenarasu MLA, அக்கா @ThamizhachiTh MP அவர்களின் தாயாருமான மறைந்த ராஜாமணி அம்மையார் அவர்களின் உடலுக்கு விருதுநகர் அருகே அவர்களது சொந்த ஊரான மல்லாங்கிணறில் அஞ்சலி செலுத்தினேன். pic.twitter.com/P5ZKnVvvFA
— Udhay (@Udhaystalin) October 5, 2020
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தமது குடும்பத்தினருடன் மல்லாங்கிணறு சென்று ராஜாமணி அம்மாள் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பொதுவாக திமுக தொடர்புடைய எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தென்மாவட்டத்தில் திமுகவை வளர்த்த மூத்த முன்னோடியான தங்கபாண்டியனாரின் மனைவி ராஜாமணி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அழகிரி குடும்பத்தினருடன் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.