ஜுன் 3... கருணாநிதி பிறந்த நாளில் கரம் கோர்க்கும் மு.க.ஸ்டாலின் - மு.க. அழகிரி? தடபுடல் ஏற்பாடுகள்?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க. அழகிரி ஆகியோர் ஜூன் 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு இணைந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே மு.க. அழகிரியை கருணாநிதி குடும்பத்தினர் சமாதானப்படுத்திவிட்டனர். தேர்தலில் திமுக வெல்லும் நிலையில் உள்ளதால், கருணாநிதியின் மூத்த மகனான மு.க. அழகிரி அதனை கெடுத்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மு.க. அழகிரியும் தம் பங்குக்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதி காத்தார். இதனால் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடனேயே சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் அழகிரி. இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் கட்டம் கட்டி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு அழகிரி மகனும் மகளும் சென்றனர். அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் மகனும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஆரத்தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையேயான மன வருத்தங்கள் முற்றாக விலகிவிட்டன.
மதுரையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், அழகிரி வீட்டுக்கு செல்வார் என கூறப்பட்டது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டமிடப்பட்டி பயணத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிந்தது. முதல்வர் ஸ்டாலினும் மதுரை பயணத்தை முடித்துவிட்டு உடனே திருச்சி கிளம்பிவிட்டார்.
இதனிடையே மு.க. அழகிரி எப்போது திமுகவுக்கு திரும்புவார் என்கிற கேள்வி திமுக, அழகிரி ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. மு.க. அழகிரி ஆதரவாளர்கள் திமுகவில் இருந்து ஒதுங்கியபடியே உள்ளனர். அவர்களுக்கு கடந்த முறை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வாய்ப்பு தரப்படவில்லை. அவர்களுக்கான பொறுப்புகளும் என்ன என்பதும் பேசி முடிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் வரும் ஜூன்3-ந் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் கருணாநிதி வீட்டில் இருந்து அழகிரி, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. என ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக கருணாநிதி நினைவிடம் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறதாம். அதன்பிறகு ஆற அமர உட்கார்ந்து, கட்சி விவகாரங்களைப் பேசலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அப்படி மு.க. அழகிரி திரும்பவும் திமுகவுக்குள் நுழையும் போது அவரது தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மு.க. அழகிரி ஆதரவாளர்களை பெரும் உற்சாகப்படுத்தி இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications