சபாஷ்.. வாழ்த்து சொல்லிய எடப்பாடியார்.. ஆலோசனையும், ஒத்துழைப்பும் கேட்பு நட்பு கரம் நீட்டிய ஸ்டாலின்
சென்னை: மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை.. 'ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை இல்லை
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
10 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய உள்ளது.
ஸ்டாலின் முதல்வர்
இந்த நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்தியா முழுக்க அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். நாளை திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதால், சட்டசபை குழு தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
எடப்பாடியார் ராஜினாமா
இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்த கையோடு, புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு ட்விட்டர் மூலமாக எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஸ்டாலின் கோரிக்கை
இந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்துள்ளார் ஸ்டாலின். அதில், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்! இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கு ஸ்டாலின் தயாராக இருப்பதை இந்த ட்விட்டர் பதிவு மூலமாக உணர்த்தி உள்ளார்.
இரு கட்சிகள் மீதான நம்பிக்கை
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளார்கள். வேறு எந்த ஒரு கட்சி வேட்பாளருக்கும் மக்கள் வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் இந்த இரு திராவிட கட்சிகளின் தலைவர்களும், இணைந்து செயல்பட வேண்டியது இது போன்ற கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் அவசியமாகும். அந்த முன்னெடுப்பை இரு தலைவர்களும் செய்துள்ளது அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.