திமுக தலை மீட்டிங்கை உற்று கவனித்த காங். பாஜகவுடன் நெருக்கம்? “டவுட் கிளீயர்” அழுத்தம் திருத்தம்!
சென்னை : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை வந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியதை, பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.
மம்தா பானர்ஜி, பாஜக கட்சியுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருவதாக கூறப்படும் நிலையில், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின் மம்தாவை சந்திப்பதை காங்கிரஸ் கட்சி கேள்விகளோடு பார்த்தது.
எனினும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் அரசியல் பேசவில்லை என அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த குழப்பங்களும் இல்லை என்பதை கிளீயராகவே ஸ்டாலின் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இல.கணேசன் வீட்டு விஷேசம்..மம்தா, ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன்,ரஜினி..ஒன்றிணைந்த தலைவர்கள்
பெங்காலி ஸ்வீட்ஸ் - புத்தகம்
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பு விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது பெங்காலி ஸ்வீட்டுகளை ஸ்டாலின் குடும்பத்தினருக்கு வழங்கினார் மம்தா பானர்ஜி. "Rule of the Commoner" DMK and the formation of political in Tamilnadu in 1949 to 1967 என்ற புத்தகத்தை மம்தாவுக்கு பரிசாக வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
பாஜக எதிர்ப்பு
தேசிய அளவில் வலுவாக உள்ள பாஜகவின் இந்தி திணிப்பு முதல் பல்வேறு விஷயங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் பலத்தைக் கூட்டும் வகையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைத்ததும் முதல்வர் ஸ்டாலின் தான். காங்கிரஸ் கூட்டணியை பலமிக்கதாக்குவது முதல்வர் ஸ்டாலின் விருப்பமாக இதுவரை வெளிப்பட்டு வந்திருக்கிறது.
மூன்றாவது அணி
அதேசமயம், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். சந்திரசேகர் ராவ், நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது தெரிகிறது. திமுகவும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கும் நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன், மம்தா பானர்ஜி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய அரசியல் பற்றியும் கூட்டணி பற்றியும் பேச இருப்பதாகத் தகவல்கள் பரவின.
பாஜக இணக்கப் போக்கு
முன்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மம்தா பானர்ஜி, சமீபகாலமாக பாஜகவுக்கு எதிரான ஆவேசப் பேச்சுகளைக் குறைத்துக் கொண்டுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதில் மோடிக்கு தொடர்பு இருக்காது என்கிற ரீதியிலும் மம்தா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பாஜகவில் இருந்த இல.கணேசனின் குடும்ப நிகழ்விலும் மம்தா பங்கேற்றதன் மூலம் அவர் பாஜகவுக்கு இணக்கமாகிவிட்டாரோ எனும் கேள்விகளும் எழுந்தன.
உன்னிப்பாக கவனித்த காங்கிரஸ்
இதனால், பாஜகவுக்கு மறைமுகமாக உதவிடும் வகையில், மூன்றாவது அணியைக் கட்டுவதற்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் முயல்வதாக வரும் தகவல்களையொட்டி, ஸ்டாலின் - மம்தா சந்திப்பை உன்னிப்பாக கவனித்தது காங்கிரஸ். மம்தாவின் பாஜக இணக்கம், திமுகவுடன் மம்தா காட்டும் நெருக்கம் ஆகியவற்றால் குழப்பத்தோடே இதனை அணுகியது காங்கிரஸ். அதற்கு ஏற்றார்போல, முதலமைச்சர் ஸ்டாலின் என்னுடைய அரசியல் ரீதியான நண்பர், அரசியல் தொடர்பான விஷயங்கள் குறித்து ஸ்டாலினிடம் விவாதிப்பேன் என கொல்கத்தாவில் பேட்டியளித்திருந்தார் மம்தா பானர்ஜி.
அரசியல் இல்லை
இந்நிலையில், சென்னையில் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "சகோதர பாசத்தோடு மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளேன். சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் எப்படிச் செல்ல முடியும்? அரசியல் குறித்தோ, இரண்டு மாநிலங்களின் ஆளுநர்களின் செயல்பாடு குறித்தோ ஆலோசிக்கவில்லை. இரு அரசியல் தலைவர்கள் அரசியல் தாண்டி வேறு விஷயங்கள் குறித்தும் பேசலாம். வளர்ச்சி பற்றி பேசலாம் அல்லவா?" எனக் கூறினார்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், " இரு தலைவர்கள் சந்திக்கும்போது மாநில வளர்ச்சி பற்றி விவாதிப்பது வழக்கம் தான். அவசியம் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக வரவேண்டும் என மம்தா பானர்ஜி எனக்கு அழைப்பு விடுத்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, தேர்தல், அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை." என அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
டவுட் க்ளீயர்
இந்தச் சந்திப்பு தொடர்பாக அரசியல் அரங்கில் எழுந்த விவாதங்களுக்கும், காங்கிரஸ் தலைமையின் கேள்விப் பார்வைகளுக்கும் க்ளீயரான பதிலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விட்டார், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்தக் குழப்பத்திற்கும் வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக ஸ்டாலின் கூறிவிட்டார். ஸ்டாலின் சொன்னதையே மம்தாவும் வழிமொழிந்து தாங்கள் அரசியல் பேசிக்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் எனத் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.