கொரோனா உதவித் தொகை- முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் திட்டம்-தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொரோனா நிவாரண உதவித் தொகையாக முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கருணாநிதி பிறந்த நாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.

இத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று பதவியேற்றவுடன் கையொப்பமிட்டார். அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான 2000 ரூபாய் தொகையை வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர்குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்தொகை நியாயவிலைக் கடைகள் மூலமாக 15.5.2021 அன்று முதல் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விநியோகிக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக 10.5.2021 முதல் 12.5.2021 வரை 3 நாட்கள் நியாயவிலைக் கடை பணியாளர்களால் வீடுதோறும் சென்று விநியோகிக்கப்படும் டோக்கன்களில், குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications