'விடுங்க பாத்துக்கலாம்'... மல்லை சத்யாவை தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்..!
சென்னை: மதிமுக துணை பொதுச்செயலாளரும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளருமான மல்லை சத்யா தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், அவரது தோளை தட்டிக்கொடுத்து நம்பிக்கையூட்டியுள்ளார் ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு ஸ்டாலினை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று சென்றார் வைகோ. அப்போது வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துக் கூறிய ஸ்டாலின் அவர்கள் அனைவரையும் நிறுத்தி குழு புகைப்படமும் எடுத்தார்.
இந்தச் சந்திப்பின் போது மல்லை சத்யாவின் முகம் வாடிய நிலையில் இருந்ததை கண்ட ஸ்டாலின், இறுதியாக அவர்கள் அங்கிருந்து புறப்படும் போது சத்யாவின் தோளை தட்டிக் கொடுத்து விடுங்க பார்த்துக்கலாம் என தைரியம் ஊட்டியிருக்கிறார்.
இதனால் நெகிழ்ந்து போன மல்லை சத்யா, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட நுணுக்கமாக ஒவ்வொருவரையும் ஸ்டாலின் கவனிக்கத் தவறவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.
மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா தான் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் அங்கு முடிவுகள் மாறியிருப்பது திமுக தலைமைக்கும், மதிமுக தரப்புக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனிடையே இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த நெல்லிக்குப்பம் புகழேந்தி மீது இருந்த அதிருப்தியே மல்லை சத்யாவை குறைந்த மார்ஜினில் தோல்வியை தழுவ வைத்துள்ளது.