ஸ்டாலின் மக்களை குழப்புகிறார்... மின் கணக்கீடு விவகாரம் குறித்து தங்கமணி அறிக்கை
சென்னை: மின் கணக்கீடு எடுக்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாக மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாகவும், அதில் உண்மையில்லை. தமிழக அரசின் மின்சார அளவீட்டை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாகிவிட்டது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடி இருப்பதாக கூறி நாளை திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டண உயர்வை எதிர்த்து வரும் 21 ஆம் தேதி(நாளை) திமுகவினர் வீட்டில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று கூறினார்.
மேலும் ஸ்டாலின் கூறுகையில், "மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல.
மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடுத்துள்ளார்கள் என மக்கள் கூறுகின்றனர். கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மின்சார கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை அளிக்காமல் கட்டணத்தை அதிகப்படுத்துவது ஏற்புடையதல்ல'' என்று கூறியிருந்தார்
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மின்சார துறை அமைச்சர் தங்கமணி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மின் கட்டணம் ரீடிங்கில் குளறுபடி என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். மின் கட்டணம் கூடுதலாக கணக்கீடு என ஸ்டாலின் கூறும் புகாரில் எள்ளளவும் உண்மை இல்லை. மக்களை திசை திருப்பும் காரியத்தில் ஸ்டாலின் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஸ்டாலின் காண்பித்தது வீட்டு மின்நுகர்வோரின் ஆவணம் இல்லை, தொழில் மின்நுகர்வோரின் ஆவணம் ஆகும். திமுகவின் முரண்பட்ட கருத்துக்கள் திமுகவுடைய முரண்பட்ட அரசியலை காண்பிக்கிறது.
அரசு வழங்கும் மின் சலுகைகளை மறைத்து பிற மாநிலங்களின் சிறிய சலுகைகளை கூறுவதா?. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது ,அதுமட்டும் இல்லாமல் மாதம் 100 unit இலவச மின்சாரம் 4 வருடங்களாக வழங்கி வருகிறோம் இதற்காக இதுவரை 11,512 கோடி வழங்கப்பட்டு உள்ளது என்று அறிக்கையில் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications